துரை வைகோவிடம் மன்னிப்பு கேட்டார் மல்லை சத்யா
மதிமுக பொதுச் செயலாளர் மல்லை சத்யாவுடனான மோதல் காரணமாக, கட்சிப் பொறுப்பில் இருந்து விலகுவதாக துரை வைகோ நேற்று அறிவித்தார். கட்சிக்கு எதிராக மல்லை சத்யா ஆதரவாளர்கள் செயல்படுவதாக துரை வைகோ கூறியிருந்தார்.
இந்த பரபரப்பான சூழலில் மதிமுக நிர்வாகக் குழுக் கூட்டம் அவைத்தலைவர் அர்ஜுன் ராஜ் தலைமையில் நேற்று நடைபெற்றது. இந்த கூட்டத்தில் கட்சியின் பொதுச்செயலாளர் வைகோ, துரை வைகோ மற்றும் கட்சி நிர்வாகிகள் கலந்துகொண்டனர்.
இந்த சூழலில், சென்னை, எழும்பூரில் நடைபெற்ற மதிமுக நிர்வாகக் குழுக் கூட்டத்தில் 40 மாவட்டச் செயலாளர்கள் துரை வைகோவுக்கு ஆதரவு தெரிவித்ததாக தகவல் தெரிவிக்கப்பட்டிருந்தது. மதிமுகவில் அமைப்புரீதியாக மொத்தம் 66 மாவட்ட செயலாளர்கள் உள்ள நிலையில் 40 மாவட்டச் செயலாளர்கள், துரை வைகோ பொறுப்பில் இருந்து விலகக்கூடாது என்று பேசியதாக தகவல் வெளியாகி இருந்தது.
இதனிடையே நிர்வாகிகள் மூலம் வாக்கெடுப்பு நடத்தி தன்னை கட்சியில் இருந்து நீக்கிவிடுமாறு ம.தி.மு.க. துணை பொதுச்செயலாளர் மல்லை சத்யா நிர்வாகக் குழுக் கூட்டத்தில் பேசியதாக தகவல் தெரிவிக்கப்பட்டிருந்தது.இந்நிலையில் தனது ராஜினாமா முடிவை துரை வைகோ திரும்பப் பெற்றார். நிர்வாகிகளின் வலியுறுத்தலையடுத்து துரை வைகோ ராஜினாமாவை வாபஸ் பெற்றதாக கூறப்படுகிறது. இதனையடுத்து மதிமுக பொதுச்செயலாளர் வைகோ முடிவை ஏற்று ராஜினாமாவை வாபஸ் பெற்றேன் என்று துரை வைகோ தெரிவித்தார்.
இந்நிலையில் மதிமுக நிர்வாக குழு கூட்டத்தில் துரை வைகோவிடம் மல்லை சத்யா மன்னிப்பு கேட்டதாக தகவல் வெளியாகி உள்ளது. இதன்படி உங்கள் மனதை காயப்படுத்தும் வகையில், என் நடவடிக்கை இருந்திருந்தால் மன்னிப்பு கேட்டுக்கொள்கிறேன் என்று துரை வைகோவிடம் மல்லை சத்யா கூறியதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
கட்சிவிரோத நடவடிக்கையில் ஈடுபடவில்லை என மல்லை சத்யா விளக்கம் அளித்த நிலையில் இருவரையும் கட்டிப்பிடிக்க வைத்து வைகோ சமாதானப்படுத்தினார்.
முன்னதாக மதிமுகவிற்கு எதிரான நபர்களுடன் தொடர்பில் இருப்பதாக மல்லை சத்யா மீது துரை வைகோ குற்றம்சாட்டியிருந்தார்.
No comments