யானை நடமாட்டம்..... தொட்டபெட்டா காட்சி முனைக்கு செல்ல சுற்றுலா பயணிகளுக்கு தடை
நீலகிரி மாவட்டம், உதகை வனப் பகுதியில் தற்போது வறட்சி நிலவும் நிலையில் விலங்குகள் உணவு தேடி குன்னூர், கோத்தகிரி உள்ளிட்ட பகுதிகளில் உலவுவது அதிகரித்து வருகிறது. இந்நிலையில், வனத்தில் இருந்து நேற்று வெளியேறிய காட்டு யானை தொட்டபெட்டா செல்லும் சாலையில் உலவியது. இதைப் பார்த்த சுற்றுலாப் பயணிகள் அச்சமடைந்து வாகனங்களை ஆங்காங்கே நிறுத்தினர்.
இந்நிலையில் தொட்டபெட்டா காட்சி முனைக்கு செல்ல சுற்றுலா பயணிகளுக்கு இன்று ஒருநாள் (06-05-2025) தடை விதித்து வனத்துறை உத்தரவிட்டுள்ளது. ஒற்றை காட்டுயானை தொடர்ந்து அப்பகுதியில் சுற்றி வருவதால் பாதுகாப்பு கருதி இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது.
தற்போது 40 பேர் கொண்ட வனத்துறையினர் யானையை அடர்ந்த வனப்பகுதிக்குள் விரட்ட முயற்சி மேற்கொண்டு வருகின்றனர்.
No comments