• Breaking News

    கிடப்பில் போடப்பட்டுள்ள நாட்டார்பட்டி-திரவியநகர் சாலை அமைக்க நடவடிக்கை.... மாவட்ட ஆட்சியரிடம் பா.ஜ.க கோரிக்கை


    கிடப்பில் போடப்பட்டுள்ள நாட்டார்பட்டி-திரவியநகர் சாலை அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டுமென மாவட்ட ஆட்சியரிடம்பா.ஜ.க. சார்பில் கோரிக்கை மனு அளிக்கப்பட்டுள்ளது.

    இது குறித்து கீழப்பாவூர் மேற்கு ஒன்றிய பா.ஜ.க. முன்னாள் பொதுச்செயலாளர் சேர்மன்தலைமையில் பாஜ.க. நிர்வாகிகள் ஆறுமுகம் (எ) முருகேசன், பேச்சிமுத்து, ராம், சதீஷ்குமார், குமரேசன், முரளிதரன், இசக்கிமுத்து, சுரேஷ், ராஜீ ஆகியோர் மாவட்ட ஆட்சியரிடம் அளித்த மனுவில் கூறியிருப்பதாவது:-

    பிரதம மந்திரி கிராம சாலை மேம்பாட்டுத் திட்டத்தின் கீழ் திப்பணம்பட்டி ஊராட்சி நாட்டார்பட்டியிலிருந்து பூவனூர் வழியாக திரவியநகர் வரை செல்லும் யூனியன் சாலை பணிகள் கடந்த 3 மாத காலமாக கிடப்பில் போடப்பட்டுள்ளது.  மெட்டல் விரிக்கப்பட்டு தார்சாலை போடப்படாமல் உள்ளதால் சாலை குண்டும், குழியுமாக மாறியதால் பள்ளி, கல்லூரி செல்லும் மாணவ, மாணவிகள், ஊர்பொதுமக்கள், விவசாயிகள் செல்லும் பொழுது கீழே விழும் அபாயம் உள்ளது.  மேலும் வாகனங்கள் செல்லும் போது டயரால் கற்கள் சிதறுவதால் விபத்து ஏற்படும் நிலை உள்ளது.

    இதே போல் சென்னெல்தாகுளத்திற்கும், புதுக்குளத்திற்கும் இடையே மத்திய அரசின் ஊரக வேலைவாய்ப்பு திட்டத்தின் கீழ் ரூ.30 லட்சம் செலவில் பாலம் அமைக்கப்பட்டுள்ளது. பாலம் அமைந்துள்ள பகுதியை தவிர குளத்தின் இரு பக்கங்களிலும் தடுப்பு சுவர் இல்லாமல் ஆபத்தான நிலையில் உள்ளது.  எனவே இப்பகுதியில் தடுப்பு சுவர் அமைப்பதுடன், கிடப்பில் போடப்பட்ட சாலைப்பணியை தொடங்கி, முடித்திடவும் நடவடிக்கை எடுக்கும் படி கேட்டுக்கொள்கிறோம்.

    இவ்வாறு அதில் தெரிவித்துள்ளனர்.

    No comments