தாராபுரம் அருகே பாலம் கட்ட தோண்டிய பள்ளத்தில் விழுந்து தம்பதி பரிதாப பலி
திருப்பூர் மாவட்டம், தாராபுரம் அடுத்த சேர்வகாரன்பாளையம் பகுதியை சேர்ந்தவர் நாகராஜ். இவரது மனைவி ஆனந்தி. இவருக்கு 8ம் வகுப்பு படிக்கும் 13 வயதான தீக்ஷனா என்ற மகள் உள்ளார். இவர் தனது மனைவி மற்றும் மகளுடன் இன்று அதிகாலை 3 மணிக்கு பைக்கில் சென்றுள்ளார்.
திருநள்ளாறு கோவிலுக்கு சென்று விட்டு தாராபுரத்தில் இருந்து பைக்கில் வீட்டுக்கு திரும்பிக் கொண்டிருந்த போது சாலையின் மத்தியில் பாலம் கட்டுவதற்காக தோண்டப்பட்ட பள்ளத்தில் தவறி விழுந்து விபத்து ஏற்பட்டது. இதில் சம்பவ இடத்திலேயே நாகராஜ் மற்றும் அவரது மனைவி ஆனந்தி உயிரிழந்தனர்.மகள் மட்டும் நீண்ட நேரமாக காயத்துடன் அலறி துடித்துள்ளார். இந்நிலையில் அந்த வழியாக சென்ற சிலர் சிறுமியை மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இது குறித்து போலீசாருக்கு தகவல் கொடுத்தனர். இது குறித்து சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார் உடலை மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
சாலையில் பாலம் அமைக்கும் தனியார் நிறுவனம், பாதுகாப்பு ஏற்பாடுகளை செய்யாததே விபத்துக்கு காரணம் என பொதுமக்கள் குற்றம் சாட்டி உள்ளனர். விபத்தில் கணவன், மனைவி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. அப்பா, அம்மாவை இழந்து சிறுமி அழுது துடித்த நிகழ்வு கண்கலங்க வைத்தது.
No comments