ஊட்டியில் கொட்டித்தீர்த்த கனமழை.... சாலைகளில் வெள்ளம்
தமிழக கடலோரப்பகுதிகள் மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. தென்கிழக்கு வங்கக்கடல் பகுதிகளில் ஒரு வளிமண்டல மேலடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதன் காரணமாக தமிழகத்தில் ஒருசில இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும், இடி, மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருந்தது.
இந்த நிலையில், உதகையில் 1 மணி நேரத்திற்கும் மேலாக இடியுடன் கூடிய கனமழை பெய்தது. இதன் காரணமாக கமர்சியல் சாலை, மத்திய பேருந்து நிலையம் செல்லும் சாலையில் வெள்ளம் சூழ்ந்தது. மேலும், ரெயில் நிலையம் அருகே இருப்பு பாதை காவல் நிலைய வளாகம் மழைநீரால் சூழ்ந்தது. ரெயில் நிலைய ஓரத்தில் நிறுத்தப்பட்டிருந்த கார்கள் தண்ணீரில் சிக்கின. சாலைகளில் வெள்ளம் சூழ்ந்ததால், அவ்வழியாக செல்லும் வாகன ஓட்டிகள் அவதியடைந்தனர்.
அதேபோல, மதுரையிலும், கோவை மற்றும் சுற்று வட்டாரப் பகுதிகளிலும் பலத்த காற்றுடன் கனமழை பெய்தது.
No comments