• Breaking News

    திமுகவில் உறுப்பினர் சேர்க்கை மந்தம்..... கட்சித் தலைமை அதிருப்தியில் இருப்பதாக தகவல்.....

     


    தமிழகத்தில் சட்டமன்ற தேர்தலுக்கு இன்னும் 10 மாத இடைவெளியே இருக்கிறது. ஆளுங்கட்சியான தி.மு.க.வோ தொடர்ந்து 2-வது முறையாக வெற்றி பெற்று 7-வது முறையாக ஆட்சி அமைத்துவிட வேண்டும் என்று திட்டம் தீட்டிவருகிறது. அந்த வகையில், கடந்த 1-ந் தேதி மதுரையில் தி.மு.க. பொதுக்குழு கூட்டத்தை பிரமாண்டமாக கூட்டியது. இந்தக் கூட்டத்தில் பேசிய கட்சியின் தலைவரும், முதல்-அமைச்சருமான மு.க.ஸ்டாலின் தி.மு.க. நிர்வாகிகளுக்கு பல்வேறு அறிவுரைகளை வழங்கினார். அதில் ஒன்று, தி.மு.க.வின் உறுப்பினர்களை 30 சதவீதம் உயர்த்துவது என்பதாகும்.

    தி.மு.க.வில் உறுப்பினர்களின் எண்ணிக்கை 2 கோடியை கடந்துவிட்டதாக கடந்த ஆண்டு கட்சித் தலைமை அதிகாரபூர்வமாக அறிவித்தது. இந்த நிலையில், உறுப்பினர்களின் எண்ணிக்கையை மேலும் 30 சதவீதம் உயர்த்த வேண்டும். அதாவது, 60 லட்சம் உறுப்பினர்களை புதிதாக இணைக்க வேண்டும் என்பதுதான் தி.மு.க. தலைமையின் உத்தரவு ஆகும்.

    இதுகுறித்து, தி.மு.க. பொதுக்குழுவில் பேசப்பட்டது. ஆனால், கள நிலவரம் தி.மு.க. தலைமைக்கு அதிர்ச்சியான தகவலையே வழங்கியுள்ளது. தி.மு.க.வில் உறுப்பினர் சேர்க்க செல்லும் நிர்வாகிகள், அரசின் 4 ஆண்டு சாதனைகளை சொல்லி, திட்டங்களை பட்டியலிட்டு பொதுமக்களிடம் கட்சியில் இணையச் சொல்கிறார்களாம். ஆனால், பொதுமக்களில் ஒரு தரப்பினரோ, "அரசு பணத்தில்தான் ரூ.1,000 மகளிர் உரிமைத் தொகை தருகிறீர்கள். அரசு பஸ்களில்தான் பெண்களுக்கு இலவச பயணம் தருகிறீர்கள்" என்று எதிர் கேள்விகளை கேட்டு தி.மு.க. நிர்வாகிகளை திக்குமுக்காட செய்கின்றனராம்.இதனால், தி.மு.க.வில் உறுப்பினர் சேர்க்கை மந்தமாகவே நடந்து வருவதாக கூறப்படுகிறது. இந்த தகவலை கேட்டு அதிருப்தி அடைந்த கட்சித் தலைமை, கடந்த 7-ந் தேதி தி.மு.க. மாவட்ட செயலாளர்கள், எம்.பி, எம்.எல்.ஏ.க்கள், தொகுதி பார்வையாளர்கள் கூட்டத்தை நடத்தியது. இந்த கூட்டத்தில் காணொலி காட்சி வழியாக கட்சியின் தலைவரும், முதல்-அமைச்சருமான மு.க.ஸ்டாலின் கலந்துகொண்டு பேசினார்.

    அப்போது, கட்சி நிர்வாகிகளிடம் உறுப்பினர் சேர்க்கையை தீவிரப்படுத்த அறிவுறுத்தினார். 30 சதவீதம் உயர்த்தப்படும் உறுப்பினர்களின் எண்ணிக்கை அப்படியே தேர்தல் நேரத்தில் வாக்காக மாற வேண்டும் என்று நிர்வாகிகளிடம் தி.மு.க. தலைமை அறிவுறுத்தி உள்ளது. தேர்தலுக்கு இன்னும் குறைந்த காலமே இருப்பதால், அதற்குள் எப்படி இலக்கை எட்ட முடியும்? என்று தி.மு.க. நிர்வாகிகள் விழி பிதுங்கி நிற்கின்றனர்.

    No comments