கோவில் நிதியில் திருமண மண்டபங்கள் கட்ட தடை
மதுரை மாவட்டம் எழுமலையை சேர்ந்த ராம.ரவிகுமார், மதுரை ஐகோர்ட்டில் தாக்கல் செய்த மனுவில் கூறியிருந்ததாவது:-
தமிழகத்தில் 27 கோவில்களில் ரூ.80 கோடி செலவில் திருமண மண்டபம் கட்டப்படும் என கடந்த 2022-ம் ஆண்டில் சட்டசபையில் அறநிலையத்துறை அமைச்சர் அறிவித்தார். அதன்படி பழனி முருகன் கோவிலின் உப கோவிலான கள்ளிமந்தையம் வரதராஜ பெருமாள் கோவிலுக்கு சொந்தமான காலி இடத்தில் ரூ.6.30 கோடியில் திருமணம் மண்டபம் கட்ட அறிவிப்பு வெளியிடப்பட்டு உள்ளது. இதுபோல தமிழகம் முழுவதிலும் உள்ள கோவில்களில் சார்ந்த மண்டபங்கள் ஏராளமானவை கட்டப்பட்டு வருகின்றன.
கோவிலுக்கு வழங்கப்படும் நன்கொடைகள், காணிக்கைகள் மூலமாக கோவில் சார்ந்த பணிகளை செய்வதே முறையாகும். எனவே கோவில் நிதியின் மூலமாக திருமண மண்டபம் கட்டுவது அரசியலமைப்பு சட்டத்துக்கு எதிரானது. இது போன்ற பணிகளுக்கு அரசின் நிதியை பயன்படுத்துவதுதான் சிறந்தது. எனவே கோவில் நிதியில் திருமண மண்டபங்கள் கட்டுவது தொடர்பாக தமிழக அரசு பிறப்பித்த அரசாணையை ரத்து செய்ய வேண்டும். அந்த அரசாணையை செயல்படுத்த இடைக்கால தடை விதித்து உத்தரவிட வேண்டும். இவ்வாறு மனுவில் கூறியிருந்தார். இந்த மனு நீதிபதிகள் எஸ்.எம்.சுப்பிரமணியம், மரியகிளாட் ஆகியோர் முன்பு நேற்று விசாரணைக்கு வந்தது.
விசாரணை முடிவில், கோவிலுக்கு சொந்தமான நிதியில் இருந்து திருமண மண்டபங்கள் கட்டுவது தொடர்பான அரசாணைக்கு இடைக்கால தடை விதித்து நீதிபதிகள் உத்தரவிட்டனர். பின்னர் இந்த வழக்கு விசாரணையை ஒத்திவைத்தனர்.
No comments