வகுப்பறையில் காதலியுடன் வீடியோ கால்..... கண்டித்த கல்லூரி பேராசியர்கள்..... மாணவரின் விபரீத முடிவு
கன்னியாகுமரி மாவட்டத்தை சேர்ந்தவர் ஜான் சாக்கோ (20). இவர், சென்னை, அண்ணா நகரில் உள்ள உறவினர் வீட்டில் தங்கியிருந்து குன்றத்தூர் அடுத்த சோமங்கலத்தில் உள்ள தனியார் கல்லூரியில் இன்ஜினியரிங் இரண்டாம் ஆண்டு படித்து வந்தார். இந்நிலையில், இவர் நேற்று கல்லூரி நிர்வாகத்தின் மீது புகார் அளிக்க குன்றத்தூர் காவல் நிலையம் வந்தார். புகார் அளித்து விட்டு, திடீரென காவல் நிலையத்திலேயே மயங்கி விழுந்தார்.
இதை கண்டதும் அங்கு பணியில் இருந்த காவலர்கள் அவரிடம் கேட்ட போது, கழிவறை சுத்தம் செய்ய பயன்படுத்தும் பினாயில் மற்றும் எலி மருந்தை கலந்து குடித்து விட்டு வந்ததாக தெரிவித்தார். இதை கேட்டதும் அதிர்ச்சி அடைந்த காவலர்கள், உடனடியாக அந்த மாணவனுக்கு முதலுதவி அளித்து விட்டு, சிகிச்சைக்காக குரோம்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
பின்னர், மேல் சிகிச்சைக்காக சென்னை, ராஜிவ் காந்தி அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். அங்கு மாணவனுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதுகுறித்து குன்றத்தூர் போலீசார் விசாரணை மேற்கொண்ட போது, கல்லூரியில் படித்து வந்த மாணவன் ஜான் சாக்கோ வகுப்பறையிலேயே தான் காதலிக்கும் பெண்ணிடம் செல்போனில் வீடியோ கால் பேசியதாகவும், இது குறித்து பேராசிரியர்கள் கண்டித்த நிலையில், மீண்டும் அதே போன்று மாணவன் செய்ததாக கூறப்படுகிறது.
எனவே, மாணவனை கல்லூரியில் இருந்து நீக்கி, வீட்டில் இருந்தே தேர்வு எழுதுமாறு கல்லூரி நிர்வாகம் கூறியதாக கூறப்படுகிறது. தற்போது மூன்றாம் ஆண்டு பயில்வதற்காக கல்லூரிக்கு சென்ற நிலையில் கல்லூரியில் சேர்க்காததால் ஆத்திரமடைந்த ஜான் சாக்கோ பினாயில் மற்றும் எலி மருந்து குடித்து விட்டு குன்றத்தூர் காவல் நிலையத்தில் கல்லூரி நிர்வாகத்தின் மீது புகார் அளித்து விட்டு மயங்கி விழுந்தது தெரியவந்தது.
இந்த சம்பவம் குறித்து குன்றத்தூர் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவத்தால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. புகார் அளித்துவிட்டு மாணவன் மயங்கிய சம்பவத்தையடுத்து அதன் உண்மைத் தன்மையை கண்டறிய காவல் நிலையத்தில் இருந்த கண்காணிப்பு கேமரா காட்சிகள் அடங்கிய டிவிஆர் பெட்டியை காவல்துறை உயரதிகாரிகள் எடுத்துச் சென்று சோதனை செய்து வருகின்றனர்.
No comments