தூய்மைப் பணியாளர்களை அடித்து நொறுக்கி சிறை வைத்துள்ளனர் உங்கள் ஏவல்துறை...... முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு எடப்பாடி பழனிச்சாமி கண்டனம் - MAKKAL NERAM

Breaking

Thursday, August 14, 2025

தூய்மைப் பணியாளர்களை அடித்து நொறுக்கி சிறை வைத்துள்ளனர் உங்கள் ஏவல்துறை...... முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு எடப்பாடி பழனிச்சாமி கண்டனம்

 


அ.தி.மு.க. பொதுச்செயலாளரும், சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவருமான எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்திருப்பதாவது:-


வணக்கம் ஸ்டாலின் அவர்களே... ரிப்பன் மாளிகை வாசலில், நள்ளிரவில் அடக்குமுறையை ஏவி , கொரோனாவின்போது கூட நம் குப்பைகளை நீக்கி சுத்தம் செய்த தூய்மைப் பணியாளர்களை அடித்து நொறுக்கி, அங்கிருந்து அகற்றி பல்வேறு இடங்களில் சிறை வைத்துள்ளனர் உங்கள் ஏவல்துறை.


யார் அவர்கள்? சமூக விரோதிகளா? குண்டர்களா? நக்சலைட்டுகளா? இல்லையே. ஏழை, எளிய மக்கள்! அன்றாடம் தூய்மைப் பணி செய்து, சென்னை மாநகரை சுத்தமாக வைத்திருந்தவர்கள். நீங்கள் கொடுத்த வாக்குறுதியை நிறைவேற்றாமல் அதற்கு நேர்மாறாக செயல்பட்டத்தைக் கண்டித்து தூய்மைப் பணியாளர்கள் அறவழியில் போராடியது ஒரு தவறா?


அவர்களோடு டீ, காபி அருந்தியது போல் போட்டோஷூட் எடுத்துக்கொண்டீர்களே... அப்போது மட்டும் இனித்தது? இப்போது நீங்கள் கொடுத்த வாக்குறுதியைக் கேட்கும் போது கசக்கிறதா? எதிர்க்கட்சித் தலைவராக நீங்கள் இருந்தபோது எழுதிய கடிதங்களில், எந்த வழக்கு இருந்தாலும், இவர்களை பணி நிரந்தரம் செய்யுங்கள் என்று நாடகமாடினீரே, நினைவில் இருக்கிறதா?


"நள்ளிரவில் அடாவடித்தனமாக, வலுக்கட்டயாமாக நம் அரசுக்கும், மக்களுக்கும் பணிபுரியும், நலிவடைந்த தூய்மைப் பணியாளர்கள் மீது 79 ஆண்டுகால சுதந்திர இந்தியாவில் இது போன்ற ஒரு அடக்குமுறையை எந்த அரசும் ஏவியதில்லை.


தூய்மைப் பணியாளர்கள் 8-க்கும் மேற்பட்ட இடத்தில் சிறை வைக்கப்பட்டுள்ளார்கள், அவர்கள் உடனடியாக விடுதலை செய்யப்பட வேண்டும் எனவும், இந்த அடாவடி நடவடிக்கைகளால் காயமடைந்தவர்களுக்கு உரிய சிகிச்சை வழங்கவும் வலியுறுத்துகிறேன்


தூய்மைப் பணியாளர்களின் கண்ணீரை, வலியை, வேதனையை தமிழ்நாடே பார்த்து கலங்குகிறது. அவர்கள் சிந்திய ஒவ்வொரு கண்ணீருக்கும் நீங்கள் பதில் சொல்லியே ஆகவேண்டும். சொல்ல வேண்டிய காலம் அவ்வளவு தூரமெல்லாம் இல்லை. இன்னும் 8 மாதங்கள் தான். இவ்வாறு அதில் தெரிவித்துள்ளார்.

No comments:

Post a Comment