பாமக நிறுவனர் ராமதாசுக்கும், அவரது மகன் அன்புமணி ராமதாசுக்கும் இடையே கடந்த சில மாதங்களாக கருத்து வேறுபாடு நிலவி வருகிறது. இதனிடையே, மாமல்லபுரத்தில் கட்சியின் பொதுக்குழுவை இன்று (சனிக்கிழமை) கூட்டுவதாக அன்புமணி ராமதாஸ் அறிவித்தார். இதை எதிர்த்து சென்னை ஐகோர்ட்டில் ராமதாஸ் தரப்பில் வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கை விசாரித்த நீதிபதி, பாமக பொதுக்குழுவுக்கு தடை விதிக்க மறுப்பு தெரிவித்தார்.
இதையடுத்து, அன்புமணி ராமதாஸ் தலைமையில் மாமல்லபுரத்தில் பாமக பொதுக்குழு கூட்டம் இன்று நடைபெற்றது. இதில், பாமக தலைவராக அன்புமணி மேலும் ஓராண்டு தொடர்வார் என்று தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. மேலும், பொதுச்செயலாளராக வடிவேலு ராவணன், பொருளாளராக திலகபாமா தொடர்வார் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், பொதுக்குழுவில் பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் பேசுகையில்,
என் மீது நம்பிக்கை வைத்து ஓராண்டு காலம் பொறுப்பில் நீட்டித்து தீர்மானம் நிறைவேற்றியதற்கு நன்றி.
பொறுப்புகள் பதவிகளை எதிர்பார்ப்பவன் நான் அல்ல என்பது உங்கள் அனைவருக்கும் தெரியும்.
என் மீது நம்பிக்கை வைத்து வந்துள்ளீர்கள். அந்த நம்பிக்கை வீண் போகாது.
2026 சட்டசபை தேர்தலுக்கு தொண்டர்கள் விருப்பப்படி இன்னும் சில நாட்களில் மெகா கூட்டணி அமைத்து ஆட்சிக்கு வருவோம் .
ராமதாசால் தற்போது பாமகவை நிர்வகிக்க முடியாத சூழல் நிலவி வருகிறது. சில செய்திகளை வெளியே சொல்ல முடியாது.
இந்த நாற்காலி நிரந்தரமாக உள்ளது. அவர் எப்போது வேண்டுமானாலும் வரலாம். உருவத்தில் இல்லை என்றாலும் உள்ளத்தில் டாக்டர் ராமதாஸ் நம்முடன்தான் இருக்கிறார்.
இவ்வாறு அவர் கூறினார்.
No comments:
Post a Comment