பாமக நிறுவனர் டாக்டர் ராமதாசுக்கும், அவரது மகனும் பா.ம.க. தலைவருமான டாக்டர் அன்புமணி ராமதாசுக்கும் இடையே மோதல் போக்கு நீடித்து வருகிறது. கட்சியில் தங்களது பலத்தை நிரூபிக்க இருவரும் போட்டி கூட்டத்தையும் நடத்துகிறார்கள். அதுமட்டுமின்றி இருவரும் மாறி மாறி ஒருவரையொருவர் பகிரங்கமாக குற்றம் சாட்டுவது மோதலின் உச்சத்தை காட்டுகிறது.
இதற்கிடையில், பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் கடந்த சில வாரங்களுக்கு முன்பு என் வீட்டிலேயே, நான் அமரும் நாற்காலிக்கு பக்கத்திலேயே யாரோ ஒட்டு கேட்கும் கருவியை வைத்துள்ளனர். யார் வைத்தார்கள்?, எதற்காக வைத்தார்கள்? என்று ஆராய்ச்சி செய்து கொண்டிருக்கிறோம் என்று கூறினார்.
டாக்டர் ராமதாஸ் கூறிய இந்த குற்றச்சாட்டு கட்சியினரிடையே பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியது. இந்த கருவியை டாக்டர் ராமதாஸ் வீட்டில் யார் வைத்தார்கள் என்பதை கண்டறிந்து நடவடிக்கை எடுக்கும்படி கிளியனூர் போலீஸ் நிலையம் மற்றும் விழுப்புரம் மாவட்ட சைபர் கிரைம் போலீசில் பாமக தலைமை நிலைய செயலாளர் அன்பழகன் புகார் அளித்தார்.
அதன் பேரில் கடந்த 17-ந்தேதி 8 பேர் கொண்ட போலீஸ் குழுவினர் டாக்டர் ராமதாஸ் வீட்டிற்கு சென்று சோதனை மேற்கொண்டனர். இதனிடையே தனியார் துப்பறியும் நிறுவனத்தினர் ஆய்வுக்காக கொண்டு சென்ற கருவியை மீண்டும் டாக்டர் ராமதாசிடம் ஒப்படைத்தனர். இதனையடுத்து ஒட்டு கேட்கும் கருவி ஆய்வுக்காக கிளியனூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் கலையரசியிடம் ஒப்படைக்கப்பட்டது.
இதனை தொடர்ந்து கடந்த இரு தினங்களுக்கு முன்பு, "'எனது தைலாபுரம் வீட்டில் உளவுக்கருவி (ஒட்டுக் கேட்கும் கருவி) வைத்தது அன்புமணிதான். உலகிலேயே தந்தையை வேவு பார்த்த மகன் அன்புமணி ராமதாஸ் தான் என டாக்டர் ராமதாஸ் பரபரப்பு குற்றச்சாட்டை கூறினார்.
இந்த நிலையில், தைலாபுரம் இல்லத்தில் பாமக நிறுவனர் டாக்டர் ராமதாசின் தொலைபேசி ஹேக் செய்யப்பட்டதாக புகார் அளிக்கப்பட்டுள்ளது. வை-பை மூலம் சட்டவிரோதமாக ராமதாசின் தொலைபேசி ஹேக் செய்யப்பட்டதாகவும், ஹேக் செய்தவர்கள் மீது நடவடிக்கை கோரி விழுப்புரம் கோட்டக்குப்பம் டிஎஸ்பி அலுவலகத்தில் ராமதாசின் நேர்முக உதவியாளர் புகார் மனு அளித்துள்ளார். மனுவை பெற்றுக்கொண்ட போலீசார் இதுகுறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
No comments:
Post a Comment