தமிழக சட்டமன்ற தேர்தலுக்கு இன்னும் சில மாதங்களே உள்ளன. இதனால், அரசியல் கட்சிகள் தங்களது தேர்தல் வியூகங்களை வகுத்து, தீவிர களப்பணி ஆற்றுகிறார்கள். 2026 சட்டமன்ற தேர்தல்தான் விஜய் தலைமையிலான தமிழக வெற்றிக் கழகம் சந்திக்கும் முதல் தேர்தல் ஆகும். எனவே முதல் தேர்தலிலேயே முத்திரை பதிக்க அக்கட்சி தீவிர முயற்சி எடுத்து வருகிறது.
அக்கட்சியின் முதல் மாநாடு விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டி அருகே கடந்த ஆண்டு நடந்தது. 2-வது மாநில மாநாடு இன்று மதுரையில் பிரமாண்டமாக நடக்கிறது. இதற்காக மதுரையில், தூத்துக்குடி தேசிய நெடுஞ்சாலையில் எலியார்பத்தி சுங்கச்சாவடி அருகே பாரபத்தி பகுதியில் 506 ஏக்கர் பரப்பளவில் இடம் தேர்வு செய்யப்பட்டு அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டு உள்ளன.
மாநாட்டு மேடையின் உச்சியில் “வாகை சூடும் வரலாறு திரும்புகிறது, வெற்றி பேரணியில் தமிழ்நாடு” என்று குறிப்பிட்டு அண்ணா, எம்.ஜி.ஆர்., விஜய் படங்கள் அமைக்கப்பட்டு உள்ளன. மாநாட்டில் பங்கேற்பதற்காக சென்னையில் இருந்து நேற்று மதியம் காரில் புறப்பட்ட த.வெ.க. தலைவர் விஜய், இரவு 7 மணியளவில் மதுரை வந்தடைந்தார்.
முன்னதாக மாநாட்டு திடல் அருகே 100 அடி உயர கொடிக்கம்பத்தை நிறுவுவதற்கான பணிகள் நேற்று நடைபெற்றபோது, எதிர்பாராதவிதமாக கிரேனின் பெல்ட் அறுந்து, கொடிக்கம்பம் அப்படியே திடலில் இருந்த ஒரு கார் மீது விழுந்தது. இந்த சம்பவத்தில் அதிர்ஷ்டவசமாக யாருக்கும் காயம் ஏற்படவில்லை. தொடர்ந்து மாநாட்டு மேடையின் அருகே தற்காலிகமாக புதிய கொடிக்கம்பம் அமைக்கப்பட்டது.
இந்நிலையில், இன்று அதிகாலை முதலே மாநாட்டு திடலுக்கு த.வெ.க. தொண்டர்கள் வருகை தர ஆரம்பித்தனர். லட்சக்கணக்கான தொண்டர்கள் திரண்ட நிலையில், மாநாட்டின் நிகழ்வுகள் முன்கூட்டியே தொடங்கின. மாநாட்டு மேடைக்கு விஜய்யின் பெற்றோர் சந்திரசேகர் மற்றும் ஷோபா, த.வெ.க. மாநில நிர்வாகிகள் உள்ளிட்டோர் வருகை தந்தனர். மாநாட்டின் தொடக்கத்தில் நாட்டுப்புற இசையுடன் கூடிய கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றன.
இதைத் தொடர்ந்து த.வெ.க. தலைவர் விஜய் மேடைக்கு வந்தார். அங்கு அமைக்கப்பட்டிருந்த 300 அடி நீள ரேம்ப் மீது நடந்து சென்று தொண்டர்களின் உற்சாக வரவேற்பை ஏற்றுக்கொண்டார். தொடர்ந்து 40 அடி உயர கொடிக்கம்பத்தில் கட்சிக் கொடியை விஜய் ஏற்றினார். இதையடுத்து த.வெ.க. நிர்வாகிகள் அருண்ராஜ், என்.ஆனந்த், ஆதவ் அர்ஜுனா உள்ளிட்டோர் உரையாற்றினார். இதைத் தொடர்ந்து த.வெ.க. தலைவர் விஜய் தனது உரையை தொடங்கினார். அப்போது அவர் பேசியதாவது;-
சிங்கம் எப்போதும் தனித்துவமானாது. ஒரு சிங்கம் கர்ஜனை செய்தால் அந்த சத்தத்தில் 8 கி.மீ. வரை அதிரும். அப்படிப்பட்ட சிங்கம் வேட்டைக்கும் மட்டும்தான் வெளியே வரும், வேடிக்கை பார்க்க வராது. அதிலும் கூட தன்னை விட பெரிய விலங்குகளை தான் குறிவைத்து தாக்கும், ஜெயிக்கும். எவ்வளவு பசியில் இருந்தாலும் உயிர் இல்லாததை, கெட்டுப் போனதை தொட்டுக் கூட பார்க்காது.
அப்படிப்பட்ட சிங்கம் அவ்வளவு சுலபமாக எதையும் தொடாது, தொட்டால் விடாது. காட்டின் நான்கு பக்கமும் தனது எல்லையை தானே வகுக்கும். காட்டையே தனது கட்டுப்பாடில் வைத்திருக்கும். சிங்கத்திற்கு கூட்டமாக இருக்கவும் தெரியும், தனியாக இருக்கவும் தெரியும். தனியாக வந்தாலும் அலட்டிக் கொள்ளாமல் அனைவருக்கும் தண்ணி காட்டும். எப்போதும் தனது தனித்தன்மையை இழக்காது.
சிங்கத்தைப் பற்றி பேசிவிட்டு நமது சிங்கக் குட்டிகளையும், சிங்கப் பெண்களையும் பற்றி பேசாமல் இருக்க முடியுமா? எனது நெஞ்சில் குடியிருக்கும் தோழர்களுக்கும், தோழிகளுக்கும், அம்மாக்கள், அக்கா, தங்கைகள், நண்பர்கள் அனைவருக்கும் எனது உயிர் வணக்கம்.
இந்த கூட்டம் ஓட்டாக மட்டும் அல்ல, ஆட்சியாளர்களுக்கு வேட்டாகவும் மாறும். யாராலும் தடுத்து நிறுத்த முடியாத குரல் இது. நமது கொள்கையில் சமரசம் இல்லை. நமது கொள்கை எதிரி பா.ஜ.க., அரசியல் எதிரி தி.மு.க.
சினிமாவிலும், அரசியலிலும் என் தலைவர் எம்.ஜி.ஆர். அவருடன் பழக எனக்கு வாய்ப்பு கிடைக்கவில்லை. ஆனால் அவரைப் போலவே குணம் கொண்ட அண்ணன் கேப்டன் விஜயகாந்த் அவர்களுடன் பழக எனக்கு வாய்ப்பு கிடைத்தது. அவரும் இந்த மதுரை மண்ணை சேர்ந்தவர்தான்.
நாம் அனைவரும் இந்தியாவின் மாபெரும் மக்கள் சக்தி கொண்ட மகத்தான மக்கள் படை. பா.ஜ.க.வுடன் மறைமுக கூட்டணிக்கு செல்ல நாம் என்ன ஊழல் கட்சியா? நம்மை நம்பி வருபவர்களுக்கு ஆட்சியிலும் அதிகாரத்திலும் உறுதியாக பங்களிப்பு தரப்படும். 2026-ல் இரண்டு பேருக்கு இடையில்தான் போட்டியே, ஒன்று தி.மு.க. மற்றொன்று த.வெ.க. 1967, 1977-ல் நடந்தது போல் 2026-ல் தமிழகத்தில் அரசியல் மாற்றம் நடக்கும்.
பா.ஜ.க.வுக்கும், தி.மு.க.வுக்கும் எதிராக மக்கள் அரசியல் என்ற சவுக்கை கையில் எடுக்கலாமா? பிரதமர் மோடி அவர்களே, நீங்கள் ஆட்சிக்கு வந்தது மக்களுக்கு நல்லது செய்யவா? அல்லது இஸ்லாமிய நண்பர்களுக்கு எதிராக சதி செய்யவா? மக்களுக்கு உங்களிடம் கேட்க ஏராளமான கேள்விகள் உள்ளன. நமது தமிழ்நாட்டு மீனவர்கள் சுமார் 800 பேர் தாக்கி அழிக்கப்பட்டுள்ளனர். கச்சத்தீவை இலங்கையிடம் இருந்து மீட்டுக் கொடுங்கள். நீட் தேர்வால் இங்கு என்னென்ன நடக்கிறது என்பதை சொல்லவே மனது வலிக்கிறது. அந்த தேர்வு தேவையில்லை என்று அறிவித்து விடுங்கள்.
த.வெ.க.வினர் இடையே எந்த அரசியலும் நுழைய முடியாது. என்னை சகோதரனாக நினைக்கும் அனைத்து தாய்மார்களின் குழந்தைக்கும் நான் தாய் மாமன் தான். தமிழ்நாடு முழுக்க நானே வேட்பாளர் என நினைத்து தேர்தலில் வாக்களிக்க வேண்டும்.
மற்றவர்கள் கட்சி ஆரம்பித்த பிறகுதான் ஒவ்வொருவரின் வீட்டுக்கும் போவார்கள். ஆனால் நாம் ஒவ்வொருவரின் விட்டுக்குள்ளும் போன பிறகுதான் கட்சியே ஆரம்பித்திருக்கிறோம். உங்கள் வீட்டில் ஒருவர் வேட்பாளராக இருப்பார், அவரும் நானும் வேறு இல்லை.
நான் சினிமாவில் மார்க்கெட் போன பிறகு அரசியலுக்கு வரவில்லை. நான் வந்ததற்கு ஒரே காரணம் நன்றிக்கடன். என் கடன் இனி என் மக்களுக்கு பணி செய்து கிடப்பதே. தமிழக மக்கள் எனக்கு கடவுள் கொடுத்த வரம். உங்களுக்காக பேச, உங்களுடன் நிற்க, உங்களுக்கு சேவை செய்ய உங்கள் விஜய் நான் வரேன். உங்களுக்காக உண்மையாக உழைக்க வந்திருக்கிறேன். நம்பிக்கையோடு இருங்கள், நல்லதே நடக்கும், வெற்றி நிச்சயம்.”
இவ்வாறு அவர் பேசினார்.
No comments:
Post a Comment