தூத்துக்குடி அருகே உள்ள மாப்பிள்ளையூரணி திரேஸ்நகரை சேர்ந்தவர் ராமசுப்பு. கர்நாடகாவில் செல்போன் கோபுரம் அமைக்கும் ஒப்பந்த பணியில் ஈடுபட்டு வருகிறார். இவரது மனைவி சக்தி மகேசுவரி (வயது 38). இந்த தம்பதிக்கு 2 பெண் குழந்தைகள் உள்ளனர். தம்பதி இடையே குடும்ப பிரச்சினை காரணமாக கருத்து வேறுபாடு ஏற்பட்டது.
இதனால் சக்தி மகேஸ்வரி தனது கணவரை விட்டு பிரிந்து சென்று தனியாக வசித்து வந்தார். அப்போது இவரது உறவினரான தூத்துக்குடி சிப்காட் போலீஸ் நிலையத்தில் பணியாற்றி வரும் ஏட்டு ஒருவருடன் பழக்கம் ஏற்பட்டு கள்ளக்காதலாக மாறியது.
இவருக்கு திருமணமாகி மனைவி, மகள் மற்றும் பிளஸ்-1 படிக்கும் 16 வயது மகன் ஆகியோர் உள்ளனர். ஆனாலும் சக்தி மகேசுவரியும், போலீஸ் ஏட்டுவும் நெருங்கி பழகி வந்தனர். இதனை அறிந்ததும் போலீஸ் ஏட்டுவின் மனைவி மற்றும் குடும்பத்தினர் கண்டித்துள்ளனர். ஆனால் இதனை கண்டுகொள்ளாமல் சக்தி மகேசுவரியின் வீட்டுக்கு, போலீஸ் ஏட்டு அடிக்கடி சென்று வந்துள்ளார்.
இதனால் வேதனையடைந்த மனைவி தனது கணவரை பிரிந்து சென்றார். எனினும் அவர்களது மகளும், மகனும் தந்தையுடன் வசித்து வருகின்றனர். போலீஸ் ஏட்டு தனது மகள், மகனை சரிவர கவனிக்காமல் அடிக்கடி சக்திமகேசுவரியின் வீட்டுக்கு சென்று விடுவது வழக்கம்.எனவே, தனது தாய் பிரிந்து சென்றதற்கு சக்திமகேசுவரி தான் காரணம் என்று போலீஸ் ஏட்டுவின் மகன் கருதினான். இதனால் சக்தி மகேசுவரியை கொலை செய்ய முடிவு செய்துள்ளான். நேற்று மாலையில் ஏட்டுவின் மகன், தனது நண்பனான 16 வயது சிறுவனுடன் சேர்ந்து சக்திமகேசுவரியின் வீட்டுக்கு சென்றான். அங்கு தனியாக இருந்த சக்தி மகேசுவரியை இருவரும் சேர்ந்து அரிவாளால் சரமாரி வெட்டிக்கொலை செய்தனர்.
இதில் படுகாயமடைந்த அவர் துடிதுடித்து சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இதனை உறுதி செய்த சிறுவர்கள் இருவரும் அங்கிருந்து தப்பி ஓடிவிட்டனர். தகவல் அறிந்ததும் தாளமுத்துநகர் போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று சக்தி மகேசுவரியின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக தூத்துக்குடி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
இந்த சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்த போலீசார் தப்பி ஓடிய 2 சிறுவர்களையும் வலைவீசி தேடி வருகின்றனர். தந்தையின் கள்ளக்காதலியை சிறுவன், தனது நண்பனுடன் சேர்ந்து வெட்டிக்கொலை செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.


0 Comments