• Breaking News

    திருச்சி அருகே 16 வயது சிறுமி கர்ப்பம்..... அக்கா கணவர் கைது


     திருச்சி அருகே உள்ள மண்ணச்சநல்லூர் பகுதியை சேர்ந்தவர் 16 வயது சிறுமி. இவரது பெற்றோர் இறந்துவிட்டனர். மேலும் அவரது அக்கா திருமணமாகி கணவருடன் சென்றுவிட்டார். இதையடுத்து அந்த சிறுமி தனது உறவினர் வீட்டில் தங்கி படித்து வந்தார். சிறுமியின் பெரியப்பா மகளை கடந்த 5 ஆண்டுகளுக்கு முன்பு சாமுவேல் (30 வயது) என்பவருக்கு திருமணம் செய்து கொடுத்துள்ளனர்.

    இதையடுத்து அவருடைய வீட்டிற்கு அந்த சிறுமியை அனுப்பி, அந்த பகுதியில் உள்ள ஒரு பள்ளியில் படிப்பதற்காக சேர்த்துள்ளனர். அதன்படி சிறுமி அக்கா வீட்டில் தங்கி, அந்த பகுதியில் உள்ள ஒரு பள்ளியில் 11-ம் வகுப்பு படித்து வந்தார். இந்த நிலையில் சம்பவத்தன்று வீட்டில் தனியாக இருந்த சிறுமியை, சாமுவேல் மிரட்டி பாலியல் பலாத்காரம் செய்துள்ளார்.

    பின்னர் சாமுவேலின் தொந்தரவு காரணமாக அங்கு இருக்க பிடிக்காமல், சிறுமி மற்றொரு ஊரில் உள்ள தனது உறவினர் வீட்டிற்கு வந்தார். பின்னர் அவர் ஒரு தனியார் காப்பகத்தில் தங்கி படித்தார். அந்த காப்பகத்திற்கு சாமுவேல் வந்து சிறுமியை தனது வீட்டுக்கு வருமாறு அழைத்துள்ளார். ஆனால் அவருடன் செல்ல மறுத்த சிறுமி, நடந்த சம்பவம் பற்றி தனது உறவினரிடம் கூறியுள்ளார்.

    இதைத்தொடர்ந்து அந்த சிறுமியை மாவட்ட குழந்தைகள் நலக்குழு அலுவலகத்தில் அவரது உறவினர் ஆஜர்படுத்தினார். பின்னர் சிறுமியை திருச்சி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்துள்ளனர். அப்போது சிறுமி 3 மாதம் கர்ப்பமாக இருப்பது தெரியவந்தது.

    மேலும் சிறுமி கொடுத்த வாக்குமூலத்தின் அடிப்படையில் சாமுவேல் மீது திருவெறும்பூர் அனைத்து மகளிர் போலீசார் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து சாமுவேலை கைது செய்தனர். பின்னர் அவரை திருச்சி மகிளா கோர்ட்டில் ஆஜர்படுத்தி, நீதிபதி உத்தரவின்பேரில் திருச்சி மத்திய சிறையில் அடைத்தனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

    No comments