• Breaking News

    காவல்துறை அனுமதி மறுப்பு..... நீதிமன்றத்தை நாட தவெக தலைவர் விஜய் முடிவு.?

     


    2026 சட்டமன்ற தேர்தலை எதிர்கொள்ள தமிழக வெற்றிக் கழகம் தீவிரமாக தயாராகி வருகிறது. அக்கட்சியின் தலைவர் விஜய், தமிழகம் முழுவதும் சூறாவளி சுற்றுப்பயணம் மேற்கொண்டு பிரசாரம் செய்ய உள்ளார். இதன்படி வரும் 13-ந்தேதி தனது முதற்கட்ட அரசியல் சுற்றுப்பயண பிரசாரத்தை திருச்சியில் இருந்து தொடங்க இருக்கிறார்.

    திருச்சி சத்திரம் பகுதியில் தொடங்கி அரியலூர், குன்னம் பெரம்பலூர் பகுதிகளிலும் பிரசார பயணத்தை விஜய் மேற்கொள்ள உள்ளார். 'தளபதி 2026 அரசியல் பிரசார பயணம்' என்ற பெயரில் தவெக தலைவர் விஜய் சுற்றுப்பயணத்தை தொடங்குகிறார்.

    இதற்காக தவெக தரப்பில் திருச்சி சத்திரம் பேருந்து நிலையத்தில் கூட்டம் நடத்த அனுமதி கேட்டு காவல் ஆணையர் அலுவலகத்தில் கடிதம் கொடுத்தனர். ஆனால், அந்த இடம் பேருந்து நிலையம் என்பதால், அங்கு அனுமதி கொடுத்தால் நாள் முழுவதும் போக்குவரத்து பாதிப்பு ஏற்படும் என்று கூறி அனுமதி மறுக்கப்பட்டது.

    இதையடுத்து, மரக்கடை பகுதியில் இருந்து சுற்றுப்பயணம் தொடங்குவதற்கு மீண்டும் மனு அளிக்கப்பட்டது. ஆனால் அதற்கும் காவல்துறை மறுப்பு தெரிவித்தது. தொடர்ந்து, 2 முறை அனுமதி மறுக்கப்பட்ட நிலையில், மாற்று இடம் குறித்து தவெக நிர்வாகிகள் ஆலோசனை நடத்தினர். அந்த வகையில் காந்தி மார்க்கெட் பகுதியில் இருந்து விஜய் தனது சுற்றுப்பயணத்தை தொடங்குவது குறித்து ஆலோசனை நடைபெற்று வருகிறது.

    இந்நிலையில், 3-வது முறையும் காவல்துறை அனுமதி மறுத்தால், நீதிமன்றத்தை அணுக தவெக தலைமை முடிவு செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

    இதனிடையே திருச்சி மாநகர போலீஸ் கமிஷனரிடம் அனுமதி பெறுவதற்காக, கடந்த 6-ந்தேதி கட்சியின் பொதுச்செயலாளர் புஸ்சி ஆனந்த் சென்னையில் இருந்து விமானம் மூலம் திருச்சிக்கு சென்றார். அவரை வரவேற்பதற்காக ஏராளமான த.வெ.க. தொண்டர்கள் விமான நிலையத்துக்கு திரண்டு வந்தனர். பின்னர் அவர் விமான நிலையம் எதிரே உள்ள விநாயகர் கோவிலில் சாமி தரிசனம் செய்தார். அப்போது த.வெ.க. நிர்வாகிகள், தொண்டர்கள் வந்த வாகனங்கள் போக்குவரத்துக்கு இடையூறாக நிறுத்தப்பட்டு இருந்ததாக கூறப்படுகிறது.

    இதுகுறித்து தகவல் அறிந்த போலீசார் அங்கு சென்று போக்குவரத்துக்கு இடையூறாக இருந்த கார்களை அப்புறப்படுத்தும்படி அறிவுறுத்தினர். இதனால் த.வெ.க.வினர் போலீசாருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இந்த சம்பவத்தை தொடர்ந்து, பொதுச்செயலாளர் புஸ்சி ஆனந்த் உள்பட 8 பேர் மீது பொதுமக்களுக்கும், போக்குவரத்துக்கும் இடையூறு ஏற்படுத்தியதாகவும், போலீசாரை பணி செய்யவிடாமல் தடுத்தது, சட்டவிரோதமாக ஒன்று கூடியது உள்பட 4 பிரிவுகளின் கீழ் திருச்சி விமான நிலைய போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    No comments