தென்காசி கோ-ஆப் டெக்ஸ் நிலையத்தில் தீபாவளி விற்பனையை மாவட்ட ஆட்சியர் தொடங்கி வைத்தார்
தென்காசி கோ-ஆப் டெக்ஸ் நிலையத்தில் தீபாவளி சிறப்பு விற்பனையை மாவட்ட ஆட்சியர் கமல்கிஷோர் தொடங்கி வைத்தார்.
தென்காசி சுவாமி சன்னதி தெருவில் உள்ள கோ-ஆப்டெக்ஸ் விற்பனை நிலையத்தில் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு சிறப்பு விற்பனை தொடக்க விழா நடைபெற்றது. மாவட்ட ஆட்சியர் கமல்கிஷோர் குத்துவிளக்கேற்றி தொடங்கி வைத்தார். யு.எஸ்.பி. கல்வி குழுமத்தின் செயலாளர் சகாய செல்வ மேரி முதல் விற்பனையை பெற்றுக்கொண்டார்.
பின்னர் மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் தெரிவித்ததாவது,
கோ-ஆப்டெக்ஸ் தமிழக கைத்தறி நெசவாளர்கள் உற்பத்தி செய்யும் ரகங்களை கொள்முதல் செய்து இந்தியா முழுவதும் உள்ள கோ-ஆப்டெக்ஸ் விற்பனை நிலையங்கள் மூலம் விற்பனை செய்து நெசவாளர்களுக்கு தொடர்ந்து வேலை வாய்ப்பினை வழங்கி வருகிறது.
கடந்த ஆண்டு தீபாவளி பண்டிகை காலத்தில் நெல்லை மண்டலத்தில் உள்ள பதிமூன்று விற்பனை நிலையத்திலும் ரூ.10 கோடிக்கு விற்பனை நடைபெற்றது. இந்த வருடம் ரூ.12 கோடிக்கு விற்பனை இலக்கு நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது. இதில் தென்காசி மாவட்டத்தில் அமைந்துள்ள கோ-ஆப்டெக்ஸ் விற்பனை நிலையத்தில் ரூ.35 லட்சம் விற்பனை இலக்கு நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.
மேலும் கோ-ஆப்டெக்ஸ் நிறுவனம் “ கோ-ஆப்டெக்ஸ் மாதாந்திர சேமிப்பு திட்டம்” என்ற சேமிப்பு திட்டத்தினை செயல்படுத்தி வருகிறது. இதன்படி 11 மாத சந்தா தொகை வாடிக்கையாளர்கள் செலுத்தினால் 12வது சந்தா தொகையை கோ-ஆப்டெக்ஸ் செலுத்தி மொத்த முதிர்வு தொகைக்கு தேவைப்படும் துணிகளை 30 சதவீத அரசு தள்ளுபடியுடன் வழங்கி வருகிறது.
இவ்வாறு அவர் பேசினார்.
இவ்விழாவில், கோ-ஆப்டெக்ஸ் திருநெல்வேலி மண்டல மேலாளர இராஜேஷ்குமார், திருநெல்வேலி கைத்தறி மற்றும் துணிநூல்துறை உதவி இயக்குநர் ஆரோக்கியராஜ், துணை மண்டல மேலாளர்.பாண்டியம்மாள், தென்காசி கோ-ஆப்டெக்ஸ் விற்பனை நிலைய மேலாளர்அருள்செல்வி, செய்தி மக்கள் தொடர்பு மக்கள் அலுவலர் தஎடிசன் மற்றும் அரசு அலுவலர்கள், வாடிக்கையாளர்கள் பொதுமக்கள் மற்றும் கோ-ஆப்டெக்ஸ் ஊழியர்கள் கலந்து கொண்டனர்.
No comments