முடிவெட்டும் கடவுள்...... மொழிபெயர்ப்பில் கோட்டைவிட்ட டிஎன்பிஎஸ்சி.....
ஒருங்கிணைந்த தொழில்நுட்ப பணிகளுக்கான தாள்-1 தேர்வை தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் (டி.என்.பி.எஸ்.சி.) நடத்தியது. இந்த தேர்வுக்கான வினாத்தாளில் ‘பின்வரும் வைகுண்ட சுவாமிகளின் கூற்றுகளில் சரியானவற்றை தேர்வு செய்க' என்ற வினாவுக்கு 4 விடைகள் கொடுக்கப்பட்டிருந்தன.
அதில் முதல் விடையில், ‘முடிசூடும் பெருமாள்’ என்றும், ‘முத்துக்குட்டி’ என்றும் அழைக்கப்பட்டார் என கூறப்பட்டு இருந்தது. அதுவே ஆங்கிலத்தில் ‘‘முடிவெட்டும் கடவுள் (தி காட் ஆப் ஹேர் கட்டிங்)'' என மொழி பெயர்க்கப்பட்டிருந்தது கடும் விமர்சனத்துக்குள்ளாகியுள்ளது.
இதேபோல் சில வினாக்களிலும் ஆங்கில மொழி பெயர்ப்பு தவறாக இருந்ததாகவும் குற்றச்சாட்டு எழுந்திருக்கிறது. டி.என்.பி.எஸ்.சி. தேர்வில் அய்யா வைகுண்டரை அவமதிக்கும் கேள்வி கேட்கப்பட்டதற்கு அரசியல் கட்சிகள் கண்டனம் தெரிவித்து வருகின்றன.
இந்த நிலையில், ஒருங்கிணைந்த தொழில்நுட்ப தேர்வில் 2 கேள்விகளில் மொழிபெயர்ப்பில் நடந்த தவறு குறித்து டிஎன்பிஎஸ்சி ஆலோசனை நடத்தி வருகிறது. தவறுகள் மீதான நடவடிக்கை குறித்தும், எதிர்காலத்தில் தவறை தவிர்ப்பது குறித்தும் ஆலோசனை நடைபெற்று வருகிறது. கேள்விகளில் தவறு ஏற்பட்டால் வழக்கமாக வழங்கப்படும் முழு மதிப்பெண்ணை இந்த முறையும் வழங்க டிஎன்பிஎஸ்சி திட்டமிட்டுள்ளது.
No comments