சென்னையில் பெய்த கனமழை..... விமான சேவை பாதிப்பு.... பயணிகள் அவதி
தென்னிந்திய பகுதிகளின் மேல் வளிமண்ட மேலடுக்கு சுழற்சி மற்றும் தென்கிழக்கு வங்கக் கடல் பகுதிகளின் மேல் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதனால், இன்று (செப்.16) முதல் செப்.21 ஆம் தேதி வரை தமிழகத்தில் அநேக இடங்களிலும், புதுச்சேரி மற்றும் காரைக்காலிலும் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.
இந்த நிலையில், சென்னையில் இன்று அதிகாலையில் சென்னை சென்ட்ரல், சென்னை எழும்பூர், கோடம்பாக்கம், கோயம்பேடு, ஆயிரம் விளக்கு, ஈக்காட்டுத்தாங்கல், வடபழனி, நுங்கம்பாக்கம், சூளைமேடு, கிண்டி உள்ளிட்ட பகுதிகளிலும், அம்பத்தூர் உள்ளிட்ட புறநகர் பகுதிகளிலும் கனமழை கொட்டித் தீர்த்தது.
அதிகாலை 2 மணிக்கு தொடங்கிய கனமழை காலை 5 மணி வரை நீடித்தது. இதனால், தாழ்வான பகுதிகளில் தேங்கிய மழைநீரால், அதிகாலையில் வேலைக்கு செல்வோர் கடும் அவதிக்கு ஆளாகியுள்ளனர். இரவு முழுவதும் விடிய, விடிய பெய்த கனமழையால், மயிலாப்பூரில் 80 மிமீ, அயனாவரத்தில் 70 மி.மீ, மேற்கு மாம்பலம், பெரம்பூர், தண்டையார்பேட்டையில் தலா 60 மி.மீ மழையும் பதிவானது.
இந்தநிலையில், சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் அதிகாலை பெய்த திடீர் கனமழையால் விமான சேவை பாதிக்கப்பட்டது.
317 பயணிகளுடன் தோகாவிலிருந்து வந்த விமானம் சென்னையில் தரையிறங்க முடியாமல் பெங்களூரு திரும்பியது.துபாய், லண்டன், சார்ஜா விமானங்கள் வானில் சிறிது நேரம் வட்டமடித்து தாமதமாக சென்னையில் தரையிறங்கின.மொரிசியஸ், தாய்லாந்து, துபாய், கத்தார், லண்டன் செல்லும்10 விமானங்கள் தாமதமாக புறப்பட்டு சென்றன.
No comments