தீபாவளிக்கு விடுமுறை எத்தனை நாள்.? முன்கூட்டியே வெளியிட கோரிக்கை
பண்டிகை என்றாலே கொண்டாட்டம் தான். அதுவும் புத்தாடை அணிந்து, பட்டாசு வெடித்து, இனிப்பு வழங்கி கொண்டாடும் பண்டிகையான தீபாவளி வந்தால், சிறுவர் முதல் பெரியவர் வரை அனைவருக்குமே கூடுதல் கொண்டாட்டம்.
அந்த வகையில், இந்த ஆண்டு அக்டோபர் மாதம் 20-ந் தேதி (திங்கட்கிழமை) தீபாவளி பண்டிகை வருகிறது. பொதுவாக, தீபாவளி பண்டிகை சமயத்தில் ஒரு நாளைக்கு முன்போ, பின்போ தேவைக்கு ஏற்ப அரசு விடுமுறை விட்டு வருகிறது. அதற்கு பதிலாக அந்த மாதத்தில் ஒரு சனிக்கிழமை வேலை நாளாக அறிவித்து அது ஈடுசெய்யப்படுகிறது.
எனவே, இந்த ஆண்டும் தீபாவளி பண்டிகைக்கு மறுநாள் அரசு விடுமுறை விட வேண்டும் என்று அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள், மாணவர்கள் இப்போதே கோரிக்கை விடுக்க தொடங்கியுள்ளனர்.
ஏற்கனவே, தீபாவளிக்கு முந்தைய இரு நாட்கள் சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமை என்பதால் வழக்கமான விடுமுறை நாள் கணக்கில் வந்துவிடுகிறது. தீபாவளிக்கு அடுத்த நாளும் விடுமுறை விடப்பட்டால், தொடர்ந்து 4 நாட்கள் விடுமுறை கிடைத்துவிடும். பண்டிகையையும் சொந்த ஊரில் சென்று கொண்டாடிவிட்டு வருவதற்கான நல்ல சூழ்நிலை ஏற்படும்.
பொதுவாக, தீபாவளி நெருங்கும் சமயத்தில்தான் அரசு இதுபோன்ற விடுமுறையை அறிவிக்கும். கடந்த ஆண்டும் அதுபோலத்தான் அறிவிக்கப்பட்டது. ஆனால், இந்த முறை முன்கூட்டியே அறிவித்தால், ரெயில், பஸ்களில் டிக்கெட் முன்பதிவு செய்ய வசதியாக இருக்கும் என்று அனைவரும் கருதுவதால், அரசு முன்கூட்டியே தீபாவளி விடுமுறை அறிவிப்பை வெளியிட வேண்டும் என்று கோரிக்கை எழுந்துள்ளது.
No comments