அமெரிக்க அதிபராக டிரம்ப் பதவியேற்றது முதல் பல்வேறு அதிரடி நடவடிக்கைகளை எடுத்து வருகிறார். டிரம்ப் மேற்கொண்ட பரஸ்பர வரி விதிப்பு நடவடிக்கையால் சர்வதேச அளவில் பொருளாதார தாக்கம் ஏற்பட்டது. இதையடுத்து, இந்த பரஸ்பர வரியை நிறுத்தி வைத்த டிரம்ப், ஒவ்வொரு நாடுகளுடனும் வர்த்தக பேச்சுவார்த்தையில் ஈடுபட்டு வரி ஒப்பந்தம் மேற்கொண்டு வருகிறார்.
இந்த நிலையில், அமெரிக்க வெள்ளை மாளிகையில் ஆஸ்திரேலிய பிரதமர் அந்தோனி அல்பனீஸ் உடன் டிரம்ப் பேச்சுவார்த்தை நடத்தினார். இந்த பேச்சுவார்த்தைக்கு பிறகு, டிரம்ப் கூறியதாவது: “சீனாவுடன் அமெரிக்கா மிகவும் மரியாதையுடன் நடந்து கொண்டுள்ளது. அதேவேளையில், நியாயமற்ற வர்த்தக நடைமுறைகளை எனது நிர்வாகம் பொறுத்துக்கொள்ளாது. சீனா 55 சதவீத வரிகளை செலுத்துகிறது என்பது உங்களுக்கு தெரியும். சீன அதிபர் ஜி ஜின்பிங் அமெரிக்காவுடன் ஒரு நியாயமான வர்த்தக ஒப்பந்தத்தில் கையெழுத்திடாவிட்டால், நவம்பர் 1ம் தேதி முதல் சீனாவுக்கு 155 சதவீதம் வரை வரிகளை எதிர்கொள்ள நேரிடும்.
அமெரிக்கா புதிய ஏற்றுமதி தடைகளை விதிக்கும். மலேசியாவில் வர்த்தக பேச்சுவார்த்தைகள் மீண்டும் தொடங்கியுள்ள நிலையில், சீனா பொறுப்புடன் செயல்பட வேண்டும். கடந்த காலங்களில் பல நாடுகள் அமெரிக்காவை சாதகமாக பயன்படுத்திக் கொண்டன, ஆனால் அந்த சகாப்தம் முடிந்துவிட்டது. இனி அவர்களால் சாதகமாகப் பயன்படுத்த முடியாது,” என்றார்.
முக்கியமான கனிமங்களை வாங்குவது தொடர்பாக ஆஸ்திரேலியாவுடன் அமெரிக்கா ஒப்பந்தம் செய்து கொண்ட நிலையில், இந்த எச்சரிக்கையை டிரம்ப் விடுத்துள்ளார். அமெரிக்காவிடம் இருந்து சோயாபீன்களை சீனா வாங்கவில்லை என்று அண்மையில் டிரம்ப் குற்றம் சாட்டியிருந்தார். இதன் தொடர்ச்சியாக தற்போது சீனாவுக்கு 155 சதவீதம் வரி விதிக்கப்படும் என்று டிரம்ப் எச்சரித்திருப்பது குறிப்பிடத்தக்கது.
0 Comments