தஞ்சை மாவட்டம் மதுக்கூர் அருகே உள்ள பெரியகோட்டை கோபாலசமுத்திரம் பகுதியை சேர்ந்தவர் சாம்பசிவம். இவருடைய மகன் வினோத்குமார் (வயது 38). இவர் புகைப்பட கலைஞராகவும், டிரைவராகவும் வேலை பார்த்து வந்தார். இவருடைய மனைவி நித்யா (35). இவர்களுக்கு 12 மற்றும் 8 வயதில் இரண்டு மகள்கள் மற்றும் 5 வயதில் மகன் இருந்தனர்.
இந்த நிலையில், நித்யாவுக்கு திருவாரூர் மாவட்டம் மன்னார்குடியை சேர்ந்த ஒருவருடன் சமூக வலைதளம் மூலமாக பழக்கம் ஏற்பட்டுள்ளது. இந்த கெட்ட சகவாசத்தால் நித்யா தனது அன்பான கணவரையும், குழந்தைகளையும் மறந்து கள்ளக்காதலனே கதி என்றானார். கடந்த 6 மாதத்திற்கு முன்பு கணவர் மற்றும் குழந்தைகளை விட்டு பிரிந்து, தனது கள்ளக்காதலனுடன் நித்யா சென்று விட்டார்.
கள்ளக்காதலனுடன் தனது மனைவி ஓடிச்சென்ற பிறகும் மனைவியை பிரிய முடியாத சூழ்நிலையில் வினோத்குமார் இருந்தார். இந்தநிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு மனைவியை சந்தித்து மீண்டும் தன்னுடன் வந்து குடும்பம் நடத்த வருமாறு அழைத்ததாக கூறப்படுகிறது. அப்போதும் நித்யா கள்ளக்காதலனை விட்டு கணவருடன் வரமறுத்து விட்டதாக கூறப்படுகிறது.
இந்த நிலையில் வினோத்குமார் கடுமையான மன உளைச்சலில் இருந்து வந்தார். இதனால் மனைவி மீது மிகுந்த ஆத்திரம் அடைந்த வினோத்குமார் நேற்று மாலை வீட்டில் குழந்தைகளுக்கு பலகாரங்கள் வாங்கி கொடுத்து சாப்பிடுமாறு கூறி உள்ளார். குழந்தைகளும் தந்தை வாங்கி கொடுத்த பலகாரங்களை ஆசை, ஆசையாக சாப்பிட்டுக்கொண்டிருந்தனர்.
அப்போது தனது மனதை கல்லாக்கிக்கொண்ட வினோத்குமார் தான் பெற்ற குழந்தைகள் என்றும் பாராது தனது 3 குழந்தைகளையும் துடிக்க, துடிக்க சரமாரியாக கழுத்தை அறுத்துக்கொலை செய்தார். இதில் 3 குழந்தைகளும் ரத்த வெள்ளத்தில் பிணமானார்கள். பின்னர் குழந்தைகளை கொலை செய்த வினோத்குமார், மதுக்கூர் போலீஸ் நிலையத்திற்கு சென்று தான் தனது 3 குழந்தைகளையும் கொலை செய்ததாக கூறி சரண் அடைந்தார்.
இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து வினோத்குமாரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
0 Comments