தூத்துக்குடி மாவட்ட கியூ பிரிவு குற்றப் புலனாய்வுத்துறை போலீஸ் இன்ஸ்பெக்டர் விஜய் அனிதாவுக்கு கிடைத்த ரகசிய தகவலின் அடிப்படையில் சப்-இன்ஸ்பெக்டர் ராமச்சந்திரன், சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் ராமர், ஏட்டுகள் இருதயராஜ்குமார், இசக்கிமுத்து, காவலர்கள் பழனி பாலமுருகன், பேச்சிராஜா ஆகியோர் தூத்துக்குடி மாவட்டம், ஆத்தூர் காவல் நிலைய எல்லைக்கு உட்பட்ட புல்லாவெளி கடற்கரைப் பகுதியில் இன்று அதிகாலையில் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர்.
அப்போது புல்லாவெளியில் இருந்து கடற்கரைக்கு செல்லும் வழியில் இலங்கைக்கு கடத்துவதற்காக ஒரு மினி லோடு வண்டியில் கொண்டு வந்த சுமார் 30 கிலோ எடை கொண்ட 42 மூட்டைகள் பீடி இலைகளும், மற்றொரு மினி லோடு வண்டியில் கொண்டு வந்த சுமார் 30 கிலோ எடை கொண்ட 41 மூட்டைகள் பீடி இலைகளும் (மொத்தம் 83 மூட்டைகள் பீடி இலைகள்) கியூ பிரிவு போலீசாரால் கைப்பற்றப்பட்டுள்ளது. மேலும் அந்த லோடு வண்டிகளின் ஓட்டுநர்களான முள்ளக்காடு, காந்திநகரைச் சேர்ந்த அய்யம்பாண்டி மகன் மதியழகன் (வயது 39), திருச்செந்தூர், வெள்ளாளன்விளை, சர்ச் தெருவைச் சேர்ந்த இஸ்ரவேல் மகன் விஷ்பண்ராஜ் பெபின்(29) ஆகிய 2 பேரையும் போலீசார் கைது செய்து விசாரித்து வருகின்றனர். கைப்பற்றப்பட்டுள்ள பீடி இலைகளின் மொத்த மதிப்பு ரூ.80 லட்சம் இருக்கும் என போலீசார் தெரிவித்தனர்.

0 Comments