சென்னை டி.பி.சத்திரம் போலீஸ் குடியிருப்பில் வசித்து வந்தவர் கார்த்திகா ராணி (வயது 30). இவர், சென்னை அண்ணா நகர் போலீஸ் நிலையத்தில் போலீசாக பணியாற்றி வந்தார். இவர், மணிவண்ணன் (34) என்பவரை திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு ஒரு மகளும், மகனும் உள்ளனர்.
கணவன்- மனைவி இடையே ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக இருவரும் 2019-ம் ஆண்டில் இருந்து பிரிந்து வாழ்ந்து வருகின்றனர். இவர்களது 2 குழந்தைகளும், கார்த்திகா ராணியின் பெற்றோருடன் கொடைக்கானலில் வசித்து வருகின்றனர். மணிவண்ணன் தற்போது பெங்களுருவில் உள்ள ஒரு ஓட்டலில் வேலை பார்த்து வருகிறார்.
நேற்று முன்தினம் இரவு கார்த்திகா ராணி தனது அறையில் உள்ள மின்விசிறியில் சேலையால் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். அக்கம் பக்கத்தினர் கொடுத்த தகவலின்பேரில் சம்பவ இடத்துக்கு சென்ற டி.பி.சத்திரம் போலீசார் தற்கொலை செய்த கார்த்திகா ராணியின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக கீழ்ப்பாக்கம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
கார்த்திகா ராணி, கணவர் பிரிந்து சென்றதால் பல மாதங்களாக மன விரக்தியில் இருந்ததாக கூறப்படுகிறது. இதனாலேயே தனியாக வசித்து வந்த அவர், தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டது முதல்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளதாக போலீசார் தெரிவித்தனர். மேலும் இதுபற்றி டி.பி.சத்திரம் போலீசார் விசாரித்து வருகிறார்கள்.

0 Comments