சென்னை அரசு ஸ்டான்லி மருத்துவமனை வளாகத்தில் கஞ்சா செடி

 


சென்னை வண்ணாரப்பேட்டையில் உள்ள அரசு ஸ்டான்லி மருத்துவமனையில் சென்னை உள்பட தமிழகம் மட்டுமின்றி வெளிமாநிலங்களில் இருந்தும் ஏராளமான நோயாளிகள் வந்து சிகிச்சை பெற்று வருகின்றனர். உள்நோயாளிகள் மற்றும் சிறை கைதிகள் சிறப்பு வார்டும் இங்குள்ளது. மருத்துவமனை வளாகத்தில் பொதுமக்கள் சுகாதாரத்துக்காக மரங்கள், செடி, கொடிகள் நட்டு பாதுகாத்து வரப்படுகிறது.

இந்தநிலையில் ஸ்டான்லி மருத்துவமனை வளாகத்தின் உள்ளே கிருமி நீக்கல் மையம் என்ற துறையின் கட்டிடத்துக்கு அருகாமையில் சுமார் 3 அடி உயரத்துக்கு கஞ்சா செடி வளர்ந்துள்ளது. இதை அங்கிருந்த பலரும் பார்த்து அதிர்ச்சி அடைந்தனர். இந்த தகவல் போலீஸ் உயர் அதிகாரிகளுக்கு தெரியவந்தது. சம்பவ இடத்துக்கு சென்ற போலீசார், அந்த கஞ்சா செடியை வேருடன் பிடிங்கி சென்றனர்.

இந்த கஞ்சா செடியை சமூக விரோதிகள் யாரேனும் வளர்த்து வந்தார்களா? இல்லை ஆஸ்பத்திரி வளாகத்தில் தானாக வளர்ந்ததா? என்ற கோணத்தில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் மருத்துவமனை வளாகத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

Post a Comment

0 Comments