இந்திய ஒலிம்பிக் சங்க தலைவரும், மாநிலங்களவை எம்.பி.யுமான பி.டி.உஷாவின் கணவர் சீனிவாசன்(வயது 67), இன்று காலை உயிரிழந்தார். இந்த தம்பதிக்கு உஜ்வால் என்ற மகன் உள்ளார். முன்னாள் மத்திய அரசு ஊழியரான சீனிவாசன், தனது குடும்பத்தினருடன் கேரள மாநிலம் கோழிக்கோடு மாவட்டத்தில் வசித்து வந்தார்.
இந்த நிலையில், சீனிவாசனுக்கு இன்று காலை உடல்நலக்குறைவு ஏற்பட்டு மயங்கி விழுந்துள்ளார். இதையடுத்து சீனிவாசனை அவரது குடும்பத்தினர் மருத்துவனைக்கு அழைத்து சென்றனர். ஆனால் அங்கு சிகிச்சை பலனின்றி சீனிவாசன் உயிரிழந்தார். சீனிவாசன் மறைவையொட்டி அவரது மனைவி பி.டி.உஷாவை பிரதமர் மோடி போனில் தொடர்பு கொண்டு இரங்கல் தெரிவித்ததாக தகவல் வெளியாகியுள்ளது.
இந்நிலையில், பி.டி.உஷாவின் கணவர் சீனிவாசன் மறைவுக்கு தமிழக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் இரங்கல் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக ‘எக்ஸ்’ தளத்தில் அவர் வெளியிட்டுள்ள பதிவில், “இந்திய ஒலிம்பிக் சங்கத் தலைவரும் மாநிலங்களவை உறுப்பினருமான பி.டி.உஷாவின் கணவர் சீனிவாசன் மறைந்த செய்தியறிந்து வருத்தமுற்றேன்.
தங்களின் அன்புக்குரியவரை இழந்து தவிக்கும் பி.டி. உஷாவுக்கும், அவரது குடும்பத்தினருக்கும் எனது இதயப்பூர்வமான இரங்கலையும் ஆறுதலையும் தெரிவித்துக் கொள்கிறேன்” என்று பதிவிட்டுள்ளார்.

0 Comments