இந்தியாவில் டிஜிட்டல் முறையிலான பணப் பரிவர்த்தனைகள் தற்போது நினைத்துப் பார்க்க முடியாத அளவிற்கு அதிகரித்துள்ளன. யுபிஐ, கிரெடிட் கார்டு, டெபிட் கார்டு, நெட் பேங்கிங் போன்ற வசதிகள் மூலம், நாம் இருக்கும் இடத்திலிருந்தே லட்சக்கணக்கான பணத்தை மற்றொரு வங்கி கணக்குக்கு எளிதாக மாற்ற முடிகிறது. அதே நேரத்தில், டிஜிட்டல் பரிவர்த்தனைகள் அதிகரிப்பதற்கு ஏற்ப இணைய மோசடிகளும் நாளுக்கு நாள் பெருகி வருகின்றன.
போலியான லிங்குகள், ஆசை வார்த்தைகள் மற்றும் ஏமாற்று அழைப்புகள் மூலம் ஓடிபி (OTP) எண் பெற்றுக் கொண்டு, ஹேக்கர்கள் அப்பாவி மக்களின் பணத்தை கொள்ளையடிக்கின்றனர். இத்தகைய டிஜிட்டல் மோசடிகளில் இழந்த பணத்தை திரும்பப் பெறுவது பெரும் சவாலாக இருந்து வருகிறது.இந்த நிலையில், டிஜிட்டல் மோசடிகளில் சிக்கி பணத்தை இழக்கும் பொதுமக்களின் நலன் கருதி, அவர்களுக்கு வங்கி மூலமாக ரூ.25,000 வரை இழப்பீடு வழங்கும் திட்டம் கொண்டு வரப்படும் என்று ரிசர்வ் வங்கி ஆளுநர் சஞ்சய் மல்ஹோத்ரா அறிவித்துள்ளார். இதற்கான விரிவான விதிமுறைகளை ரிசர்வ் வங்கி விரைவில் வெளியிட உள்ளது. இந்த விதிமுறை வரைவு வெளியான பின்னர், வங்கிகள், நிறுவனங்கள் மற்றும் பொதுமக்கள் தங்களது கருத்துகள் மற்றும் ஆலோசனைகளை தெரிவிக்கலாம். அதனைத் தொடர்ந்து விதிமுறைகள் இறுதி செய்யப்பட்டு நடைமுறைக்கு வரும்.
இந்த திட்டத்தின் கீழ், டிஜிட்டல் மோசடியில் பணத்தை இழந்தவர்களுக்கு மொத்த இழப்புத் தொகையின் 85 சதவீதம் வரை வழங்கப்படும். ஆனால் திருப்பி வழங்கப்படும் அதிகபட்ச தொகை ரூ.25,000 ஆக மட்டுமே நிர்ணயிக்கப்பட்டுள்ளது. மொத்த இழப்பு எவ்வளவு இருந்தாலும், அதிகபட்சமாக ரூ.25 ஆயிரம் மட்டுமே வழங்கப்படும். மேலும், இந்த இழப்பீடு ஒரு நபருக்கு வாழ்நாளில் ஒருமுறை மட்டுமே கிடைக்கும் வகையில் ஏற்பாடுகள் செய்யப்பட உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பான விரிவான விதிகள் விரைவில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

0 Comments