திமுக பைல்ஸ் என்ற பெயரில் அந்த கட்சியின் முன்னணி தலைவர்களின் சொத்து விவரங்களை பா.ஜ.க., முன்னாள் மாநிலத் தலைவர் அண்ணாமலை வெளியிட்டார். இதில், முன்னாள் கப்பல்துறை அமைச்சர் டி.ஆர்.பாலுவின் சொத்து விவரங்களையும் வெளியிட்டார். அவருக்கு 21 நிறுவனங்கள் உள்ளதாக கூறியிருந்தார். இது ஆதாரமற்ற குற்றச்சாட்டு என்றும், அவதூறு பரப்புவதாகவும் கூறி அண்ணாமலைக்கு எதிராக சென்னை சைதாப்பேட்டை கோர்ட்டில் டி.ஆர்.பாலு வழக்கு தொடர்ந்தார்.இந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது டி.ஆர்.பாலுவை, அண்ணாமலை குறுக்கு விசாரணை செய்தார். அதன் விவரம் வருமாறு:-
அண்ணாமலை: கப்பல் போக்குவரத்து துறையின் அமைச்சராக இருந்த போது டி.ஆர்.பாலு 10 கப்பல்களை சொந்தமாக விலைக்கு வாங்கினார் என மு.க.அழகிரி 2014-ம் ஆண்டு கருத்து தெரிவித்தார். அது ஞாபகம் உள்ளதா?
டி.ஆர்.பாலு: எனக்கு தெரியாது.
அண்ணாமலை: இதுகுறித்து பத்திரிகைகளில் செய்தி வந்துள்ளது. (இவ்வாறு கூறி, அந்த பத்திரிகை செய்திகளை தாக்கல் செய்தார்.)
டி.ஆர்.பாலு: செய்தி வேறு விதமாக உள்ளது. ஆனால் அதை உள்நோக்கத்துடன் அண்ணாமலை வேறு விதமாக பேட்டியில் தெரிவித்துள்ளார். அவர் பேசியது அவதூறுதான்.
அண்ணாமலை: சேது சமுத்திர திட்டத்தை அமல்படுத்துவதற்காகவும், சுய லாபம் அடைவதற்காகவும் டி.ஆர்.பாலு அமைச்சராக இருந்த போது 10 மீன்பிடி கப்பல்களை அதிகாரத்தை தவறாக பயன்படுத்தி வாங்கியுள்ளதாக மு.க.அழகிரி அதே பத்திரிகையில் பேட்டி அளித்துள்ளார்.
டி.ஆர்.பாலு: மு.க.அழகிரி மட்டுமல்ல, அண்ணாமலைக்கும் சேது சமுத்திர திட்டம் என்றால் என்ன என்பதே தெரியவில்லை.
அண்ணாமலை: அழகிரி மீது அவதூறு வழக்கு தொடர்ந்தீர்களா?
டி.ஆர்.பாலு: நான் மட்டுமே கப்பல் வாங்கியதாக சொல்வதில் உண்மையில்லை, உள் நோக்கத்துடன் அழகிரி பேட்டி கொடுத்ததாக கருதவில்லை. 10 கப்பல்கள் இல்லை. 2 கப்பல்கள் மட்டுமே வாங்கப்பட்டது. அழகிரி விஷயம் தெரியாமல் அரைவேக்காட்டு தனமாக செய்தித்தாளுக்கு பேட்டியளித்துள்ளார். அதற்காக அவதூறு வழக்கு தொடர தேவையில்லை. அண்ணாமலையும் அரைவேக்காட்டு தனமாக அதை ஆதாரமாக கொடுக்கிறார்.
அண்ணாமலை: மத்திய அமைச்சராக இருந்த போது 10 கப்பல்கள் வாங்கினீர்களா?
டி.ஆர்.பாலு: இல்லை. 2 கப்பல்கள்தான் வாங்கினேன்.
இந்த கேள்விகளை தொடர்ந்து டி.ஆர்.பாலுவிடம், அண்ணாமலை மேலும் கேள்விகளை கேட்டு வருகிறார். அதற்கு அவர் பதில் அளித்து வருகிறார். குறுக்கு விசாரணை தொடர்ந்து நடந்து வருகிறது.

0 Comments