மத்திய சாலை போக்குவரத்து அமைச்சகம் இருசக்கர வாகனம் முதல் கனரக வாகனங்கள் வரையிலான அனைத்து வாகனங்களுக்கும் தகுதி சான்றிதழ் புதுப்பிக்கும் கட்டணத்தை உயர்த்தி கடந்த 11.11.25 அன்று உத்தரவிட்டது. மேலும் 17.12.25 முதல் போக்குவரத்து துறையின் இணை யதளத்தில் வரைவு வழிகாட்டு நெறிமுறையில் குறிப்பிட்டுள்ள கட்டணங் களை வாகனங்களின் பதிவு வருடத்திற்கு ஏற்ப அவசர, அவசரமாக நடைமுறைப்படுத்தியது.
இந்த கட்டண உயர்வு லாரி உரிமையாளர்களுக்கு பேரிடியாக அமைந்தது. இதனையடுத்து கட்டண உயர்வை ரத்து செய்ய வலியுறுத்தி போக்குவரத்துதுறை அமைச்சர், அதிகாரிகள், எம்.பி.க்களை சந்தித்து நேரில் கோரிக்கை வைத்தனர். கட்டண உயர்வு ரத்து சம்பந்தமான உத்தரவு வரும் என 90 நாட்களுக்கு மேல் காத்திருந்தும் பலன் இல்லை.எங்களது கோரிக்கை தமிழக முதல்-அமைச்சரின் கவனத்திற்கு கொண்டு செல்லப்பட்டதா? என்பதும் கேள்வி குறியாய் உள்ளதாக லாரி உரிமையாளர் சங்கம் தெரிவித்தது. தொடர்ந்து கட்டண உயர்வை ரத்து செய்ய வலியுறுத்தி வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இந்த நிலையில், லாரி உள்ளிட்ட வாகங்களுக்கான தகுதிச் சான்றிதழ் (எப்.சி) கட்டண உயர்வு 3 மாதங்களுக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது. லாரி உரிமையாளர் சங்கங்களின் கோரிக்கைகளை ஏற்று தமிழ்நாடு அரசு உத்தரவிட்டுள்ளது. மேலும் தகுதிச் சான்றிதழ் பெறுவதற்கு பழைய கட்டணமே வசூலிக்கப்படும் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது.

0 Comments