ஓடும் பேருந்தில் வாலிபர் தூக்குப்போட்டு தற்கொலை

 


பழனியில் இருந்து திருச்சிக்கு நேற்று இரவு அரசு பேருந்து ஒன்று புறப்பட்டு சென்று கொண்டிருந்தது. பேருந்தை டிரைவர் ராமச்சந்திரன் (60 வயது) ஓட்டினார். கண்டக்டராக செந்தமிழ் செல்வன் (38 வயது) என்பவர் பணியாற்றினார்.

அந்த பேருந்தில் சுமார் 22 பயணிகள் இருந்தனர். பேருந்து ஒட்டன்சத்திரம் பேருந்து நிலையத்திற்கு வந்ததும் அதில் சுமார் 30 வயது உடைய வாலிபர் ஒருவர் ஏறினார். அந்த வாலிபர் திண்டுக்கல் செல்வதற்கு கண்டக்டரிடம் டிக்கெட் வாங்கினார். இரவு நேரமாகியதால் பேருந்தில் அதன் பிறகு பயணிகள் யாரும் ஏறவில்லை. இதனால் பின் இருக்கையில் அந்த வாலிபர் மட்டும் அமர்ந்து இருந்தார்.கண்டக்டர் பயணிகளுக்கு டிக்கெட்டுகளை கொடுத்துவிட்டு டிரைவர் இருக்கைக்கு அருகே உள்ள இருக்கையில் சென்று அமர்ந்து இருந்தார். ஒட்டன்சத்திரத்தில் இருந்து புறப்பட்டு பேருந்து திண்டுக்கல் நோக்கி வந்து கொண்டிருந்தது. பேருந்தில் உள்பகுதியில் இருந்த விளக்குகள் அணைக்கப்பட்டது.

நள்ளிரவு 1 மணியளவில் ஒட்டன்சத்திரம் அருகே ரெட்டியார் சத்திரம் என்னுமிடத்தில் பேருந்து வந்தபோது பின் பகுதியில் ஏதோ சத்தம் கேட்டது.உடனே கண்டக்டர் எழுந்து சென்று பார்த்தார். அங்கு பின் வாசல் படிக்கட்டு அருகே இருந்த கம்பியில் வேட்டியால் அந்த வாலிபர் தூக்குப்போட்டு தற்கொலை செய்து பிணமாக தொங்கினார். இதை பார்த்து கண்டக்டரும், பயணிகளும் அதிர்ச்சி அடைந்தனர். உடனே பேருந்தை டிரைவர் நிறுத்தினார். இதுகுறித்து ரெட்டியார்சத்திரம் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.

விரைந்து வந்த போலீசார் வாலிபரின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக திண்டுக்கல் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அவர் யார்? எதற்காக தற்கொலை செய்து கொண்டார். என்பது குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Post a Comment

0 Comments