திரிஷா, விஜய் குறித்து நயினார் நாகேந்திரன் பேசியதற்கு கண்டனங்கள் வலுத்து வருகிறது.
தமிழக வெற்றிக் கழக தலைவரும், நடிகருமான விஜய், நடிகை திரிஷாவுடன் இணைந்து 5 படங்களில் ஒன்றாக நடித்துள்ளனர். இந்தநிலையில் அரசியலில் அடியெடுத்து வைத்துள்ள விஜய்யையும், நடிகை திரிஷாவையும் குறிப்பிட்டு தேசிய கட்சியான பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் சர்ச்சைக்குரிய வகையில் பேசியுள்ளார். விஜய் வீட்டை விட்டு வெளியே வரவேண்டும், திரிஷாவிடமிருந்து வர வேண்டும். குடும்பத்துடன் இணைந்து இருக்க வேண்டும் என்றெல்லாம் பேசியிருந்தார்.
இந்தநிலையில் ஒருவரின் தனிப்பட்ட வாழ்க்கையில் தலையிடுவதா என நயினார் நாகேந்திரனுக்கு கண்டனங்கள் குவிந்து வருகிறது. இந்நிலையில் இன்று (பிப்ரவரி 14) ஈரோட்டில் செய்தியாளர்களிடம் பேசிய தவெக மாநில நிர்வாகக் குழு தலைமை ஒருங்கிணைப்பாளர் செங்கோட்டையனிடம் நயினாரின் பேச்சு குறித்து கேள்வி எழுப்பப்பட்டது. இதற்கு அவர், “அவரெல்லாம் ஒரு ஆளா… அதெல்லாம் ஒரு கட்சியா?” என காட்டமாக பதிலளித்துவிட்டு சென்றுவிட்டார்.
“பாஜக போன்ற ஒரு கட்சியில் தலைமை பொறுப்பில் இருந்து கொண்டு பொதுவெளியில் நயினார் போன்ற நபர்கள் நாகரிகம் இல்லாமல் பேசுவதா? அவர்கள் வெற்றிப் பெறபோவதில்லை. நோட்டாவுக்கு கீழ் இருக்கும் கட்சி அது. நயினார் கடைசி வரை ஒரு அரசியல்வாதியாக போவதில்லை. அவர் பிசினஸ் மேனாகத்தான் இருந்து வருகிறார். அவரிடம் இதைத் தவிர பெரிதாக எதுவும் எதிர்பார்க்க முடியாது. அவரை போன்ற நபர்கள் தரக்குறைவான பேச்சை தவிர்க்க வேண்டும். அவர் தேர்தலில் படுதோல்வி அடைவார்” என்று தவெக மூத்த நிர்வாகி சிடிஆர் நிர்மல் குமார் கூறியுள்ளார்.

0 Comments