நாகப்பட்டினம் மாவட்டம், திருவாய்மூரில் பிரசித்தி பெற்ற சப்தவிடங்க ஸ்தலங்களில் ஒன்றான ஸ்ரீ தியாகராஜ ஸ்வாமி திருக்கோயில் அமைந்துள்ளது. காசிக்கு அடுத்தபடியாக சத்ரு சம்ஹார பைரவர், அசிதாங்க பைரவர், ருரு பைரவர், சண்ட பைரவர், குரோதன பைரவர், கபால பைரவர், உன்மத்த பைரவர், பீஷண பைரவர் உள்ளிட்ட 8 பைரவர்கள் ஒரே நேர்கோட்டில் அஷ்ட பைரவர் சன்னதியில் அருள்பாலித்து வருவது இக்கோயிலுக்குரிய தனிச்சிறப்பாகும்.ஒவ்வொரு மாதமும் தேய்பிறை அஷ்டமியை முன்னிட்டு சிறப்பு வழிபாடு வெகு விமர்சையாக நடைபெறும்.
அதன்படி நேற்றிரவு தை மாத தேய்பிறை அஷ்டமியை முன்னிட்டு சிறப்பு யாகம் சிவாச்சாரியார் பிச்சைமணி நடைபெற்றது. முன்னதாக திரவிய பொடி, மஞ்சள், சந்தனம்,விபூதி, குங்குமம்,பால், பன்னீர், பஞ்சாமிர்தம் உள்ளிட்ட 14வகை திரவியங்கள் கொண்டு சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டது.அதனைத்தொடர்ந்து நாதஸ்வர குழுவினரின் மேளதாள இன்னிசையுடன் கடம் கோயிலை சுற்றி எடுத்து வரப்பட்டு கடத்தில் பூஜிக்கப்பட்ட புனித நீர் கொண்டு அஷ்ட பைரவர்களுக்கு சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது. அதனைத் தொடர்ந்து பல வண்ண மலர்களால் அலங்கரித்து மகா தீபாரதனை காண்பிக்கப்பட்டது.
இந்நிகழ்வில் நாகை, மயிலாடுதுறை காரைக்கால் திருவாரூர் உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களைச் சேர்ந்த திரளான பக்தர்கள் பங்கேற்றனர். பக்தர்கள் அனைவருக்கும் அன்னதானம் வழங்கப்பட்டது.
திருக்குவளை செய்தியாளர் த.கண்ணன்





0 Comments