சைவம், வைணவம், பெண்கள் குறித்து சர்ச்சை பேச்சு..... பொன்முடி ஆஜராக உத்தரவு

 


சைவம், வைணவம் குறித்தும் பெண்கள் குறித்தும் சர்ச்சையாக பேசிய வழக்கில் முன்னாள் அமைச்சர் பொன்முடி நேரில் ஆஜராக ஜார்ஜ் டவுன் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

பெண்களை குறிப்பிட்டு சைவ வைணவ மதங்கள் தொடர்பாக முன்னாள் அமைச்சர் பொன்முடி பேசியது சர்ச்சைக்குள்ளானது. இதனால் பொன்முடியின் கட்சி பதவியும் அமைச்சர் பதவியும் பறிக்கப்பட்டது.பொன்முடி பேசியது தொடர்பாக சென்னை உயர் நீதிமன்றம் தாமாக முன் வந்து வழக்குப்பதிவு செய்தது.  

இந்த வழக்கில், ”பொறுப்பான பதவியில் இருந்த பொன்முடி இதுபோன்ற பேச்சை தவிர்த்திருக்க வேண்டும். இந்த வழக்கு முடித்து வைக்கப்படுகிறது. 

எனினும் பொன்முடிக்கு எதிராக தனிநபர் புகார் தெரிவிக்கலாம்.புகார்களை காவல்துறையினர் முடித்து வைத்ததை எதிர்த்து சம்பந்தப்பட்ட மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் வழக்கு தொடரலாம்” என்று உத்தரவு பிறப்பித்தார். 

இதைத்தொடர்ந்து   பொன்முடி மீது சைதாப்பேட்டை நீதிமன்றத்தில் சென்னை மாநகராட்சி பாஜக உறுப்பினர் உமா ஆனந்தன்  வழக்குத் தொடர்ந்தார். அதில், மத ரீதியாக வெறுப்புணர்வை தூண்டுதல், மத உணர்வைப் புண்படுத்துதல் ஆகிய பிரிவுகளின் கீழ்  பொன்முடிக்கு தண்டனை வழங்க வேண்டும் என்று கோரியிருந்தார்.

இந்த வழக்கு எம்.பி., எம்எல்ஏக்கள் மீதான வழக்குகளை விசாரிக்க அமைக்கப்பட்டுள்ள ஜார்ஜ் டவுன் நீதிமன்றத்துக்கு மாற்றப்பட்டது.

இந்த வழக்கு நீதிபதி சி.சுந்தரபாண்டியன் முன் கடந்த முறை விசாரணைக்கு வந்த போது, வரும் மார்ச் 24ஆம் தேதி பொன்முடி நேரில் ஆஜராக சம்மன் அனுப்ப உத்தரவிடப்பட்டது. 

ஆனால் இன்றைய தினம் பொன்முடி நேரில் ஆஜராகவில்லை. 

அவரது சார்பில், ‘நேரில் ஆஜராவதில் இருந்து விலக்கு அளிக்கக் கோரி உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட மறு ஆய்வு மனு நிலுவையில் இருப்பதால் நேரில் ஆஜராகவில்லை’ என்று தெரிவிக்கப்பட்டது

இதையடுத்து, வரும் மே மாதம் 12 ஆம் தேதி நேரில் ஆஜராக உத்தரவிட்ட நீதிபதி, வழக்கை ஒத்திவைத்தார்.

Post a Comment

0 Comments