மதுரை கிழக்கு தொகுதியில் வாக்கு எண்ணிக்கையின் போது அமைச்சர் மூர்த்தி தன்னுடைய 3 செல்போன்களை உடைத்தது தெரிய வந்துள்ளது. மதுரை நிலவரம் தொடர்பாக அமைச்சர் மூர்த்திக்கு வந்த தொடர் அழைப்புகளால் டென்ஷனானதோடு, வாக்கு எண்ணிக்கையில் பின்தங்கியதால் விரக்தியடைந்த மூர்த்தி தன் செல்போன்களை உடைத்திருக்கிறார்.
தமிழக சட்டசபைத் தேர்தலில் தவெக 108 இடங்களிலும், திமுக 73 இடங்களிலும், அதிமுக 53 இடங்களிலும் வெற்றி பெற்றுள்ளது. அதிலும் மதுரையில் 8 தொகுதிகளில் தவெக அபார வெற்றியை பெற்றிருக்கிறது. இது திமுக மற்றும் அதிமுகவின் சீனியர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது. ஏனென்றால் சிட்டிங் அமைச்சர்களான மூர்த்தி, பிடிஆர் பழனிவேல் தியாகராஜன் உள்ளிட்டோர் தோல்வி அடைந்துள்ளனர்.
அதிலும் மதுரை கிழக்கு தொகுதியில் அமைச்சர் மூர்த்தி தோல்வி அடைந்தது திமுகவினர் மத்தியில் ஆச்சரியத்தை ஏற்படுத்தி இருக்கிறது. ஏனென்றால் 2016 சட்டசபைத் தேர்தலிலேயே திமுக சார்பாக களமிறங்கிய மூர்த்தி பெருவாரியான வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார். இம்முறையும் வாக்கு எண்ணிக்கை தொடங்கப்பட்ட போது அமைச்சர் மூர்த்தி முன்னிலையில் இருந்தார்.
ஆனால் 6 சுற்றுகளுக்கு பின் அமைச்சர் மூர்த்திக்கு தவெக வேட்பாளர் கார்த்திகேயன் கடுமையான சவால் அளிக்க தொடங்கினார். அப்போதே வாக்கு எண்ணிக்கை டிரெண்ட் மாறுவதை வாக்கு எண்ணும் அலுவலர்கள் உணர்ந்துவிட்டனர். 6வது சுற்றுக்கு பின் தவெக வேட்பாளர் கார்த்திகேயன் முன்னிலை பெற தொடங்க, அமைச்சர் மூர்த்தி பின்னடைவு என்று மீடியாக்களில் செய்திகள் வெளியானது.
ஒரு கட்டத்தில் அமைச்சர் மூர்த்தியின் செல்ஃபோன் இடைவிடாமல் அடித்து கொண்டே இருக்க, அவர் பதில் அளிக்க விரும்பவில்லை. இப்படியே ஒவ்வொரு செல்போனாக உடைத்துக் கொண்டே சென்ற மூர்த்தி, வாக்கு எண்ணிக்கை முடிவதற்குள் 3 செல்ஃபோன்களை உடைத்துவிட்டாராம். ஒரு கட்டத்தில் வாக்கு எண்ணிக்கை மையத்தில் இருந்து வெளியேறிவிட்டார் மூர்த்தி.
அப்போது தவெகவினர் மூர்த்தியை கலாய்க்கும் வகையில் பல்வேறு சேட்டைகளை செய்தனர். மூர்த்தியின் காருக்கு கூட முறையாக வழி கொடுக்கவில்லை. வாக்கு எண்ணிக்கை முடிவடைந்து கார்த்திகேயன் வென்ற பின், மதுரை நெடுஞ்சாலை தொடங்கி மாட்டுத்தாவணி வரை கொண்டாட்டம் களைக்கட்டியது. இது திமுகவினர் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

0 Comments