தென்காசி மாவட்டம் கடையநல்லூர் அருகே காசிதர்மம் கிராமத்தை சேர்ந்த கல்லூரி மாணவர் விக்னேஷ் (வயது 19) என்பவருக்கும், அதே பகுதியை சேர்ந்த முத்துப்பாண்டி(60) என்பவருக்கும் இடையே ஆடு மேய்ப்பது தொடர்பாக ஏற்கனவே தகராறு இருந்து வந்தது. இதில் ஏற்கனவே விக்னேஷ் கைது செய்யப்பட்டு ஜாமீனில் வெளிவந்திருந்தார்.
நேற்று முன்தினம் காலை, தனது மோட்டார் சைக்கிளை மீட்பதற்கான ஆவணங்களை ஜெராக்ஸ் எடுக்க தனது தாயார் மாடத்தியுடன் விக்னேஷ் கடைக்கு சென்றுள்ளார். அப்போது அங்கு வந்த முத்துப்பாண்டி, தான் மறைத்து வைத்திருந்த அரிவாளால் விக்னேஷை சரமாரியாக வெட்டியுள்ளார். மகனை காப்பாற்ற முயன்ற தாய் மாடத்திக்கும் கைவிரலில் வெட்டு விழுந்தது. படுகாயமடைந்த 2 பேரும் தென்காசி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
இந்த தாக்குதலை கண்டித்து விக்னேஷின் உறவினர்கள் மற்றும் சமூகத்தினர் செங்கோட்டை- கடையநல்லூர் சாலையில் திடீர் மறியலில் ஈடுபட்டனர். அப்போது அங்கு வந்த மற்றொரு தரப்பினருக்கும் இவர்களுக்கும் இடையே வாக்குவாதம் முற்றி, இருதரப்பினரும் கற்களை வீசி தாக்கிக்கொண்டனர். இந்த கல்வீச்சில் 4-க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர்.

0 Comments