தஞ்சை மாவட்டம் கும்பகோணம் அருகே உள்ள மானம்பாடி பகுதியை சேர்ந்தவர் அலெக்ஸ்சாண்டர்(வயது 36). நேற்று காலை இவர், தனக்கு சொந்தமான வயலில் சாகுபடிக்கான வேலையில் ஈடுபட்டார். அப்போது வயலில் வரப்பு பகுதியில் மண்ணை வெட்டி எடுத்தபோது வினோதமான சத்தம் கேட்டுள்ளது. உடனே அவர் மண்ணை மேலும் வெட்டிப்பார்த்தபோது அங்கு சாமி சிலைகள் இருந்தது தெரிய வந்தது. யானைமேல் திருவாட்சியுடன் அம்மன் அமர்ந்திருப்பது போன்ற சிலை ஒன்றும், மற்றும் 2 சாமி சிலைகளும் இருந்தது.
உடனடியாக அவர் இதுகுறித்து வருவாய்த்துறையினருக்கு தகவல் தெரிவித்தார். அதன்பேரில் சம்பவ இடத்திற்கு வந்த வருவாய்த்துறையினர், சுமார் ஒன்றரை அடி உயரம் கொண்ட யானை மேல் திருவாட்சியுடன் அம்மன் அமர்ந்திருக்கும் சிலை உள்பட 3 சாமி சிலைகள், ஒரு உடைந்த பானை உள்ளிட்டவற்றை மீட்டனர். இது தொடர்பாக வருவாய்த்துறை அதிகாரிகள் கூறுகையில், வயலில் கண்டெடுக்கப்பட்ட சிலைகள் பஞ்சலோகத்தால் ஆனது. இந்த சிலைகள் 12, 13-ம் நூற்றாண்டை சேர்ந்ததாக இருக்கலாம் என தெரிகிறது என்றனர்.

0 Comments