அ.தி.மு.க.வில் இருந்து விலகிய முன்னாள் அமைச்சர் செம்மலை செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது:-
எம்.ஜி.ஆரும், ஜெயலலிதாவும் எனக்கு பல்வேறு வாய்ப்புகள் தந்து அழகு பார்த்தார்கள். இயக்கம் தொடங்கிய காலத்தில் இருந்து எம்.ஜி.ஆருடன் பயணித்தேன். அதற்கு பிறகு அம்மாவுடன் பயணித்தேன். இந்த இயக்கத்தில் இன்று வேதனையோடு கனத்த இதயத்தோடு கட்சியில் இருந்து விலகுகிறேன்.
அந்த இரு ஆன்மாக்களுக்கு எனது வருத்தத்தை தெரிவித்து, அவர்களிடம் மன்னிப்பை கேட்க கடமைப்பட்டவனாக இருக்கிறேன். என்னுடைய விலகலுக்கு பிறகாவது இந்த இயக்கத்தை கட்டிக்காக்க வேண்டும்.
இந்த இயக்கம் தமிழக அரசியலில் நிலையாக இருக்க வேண்டும். அதுதான் தமிழ்நாட்டிற்கு நல்லது. இந்த இயக்கம் இருந்தால்தான் தமிழ்நாட்டு மக்களுக்கு பாதுகாப்பு. எனது விலகலுக்கு பிறகாவது கட்சியின் முக்கிய பொறுப்பில் இருக்கிறவர்கள் இனிமேலாவது தங்களுக்கு இருக்கும் ஈகோவை விடுத்து செய்ய தவறிய குறைபாடுகளை நீக்கி இயக்கத்தை காப்பாற்ற வேண்டும், வளர்க்க வேண்டும் என வேண்டுகோள் விடுக்க கடமைப்பட்டிருக்கிறேன். இது கட்சிக்கும் நல்லது, நாட்டுக்கும் நல்லது.
மக்கள் இயக்கமாக தொடங்கப்பட்ட கட்சி மக்களிடம் இருந்து விலகுகிறதோ என்ற அச்சம் மக்களிடம் இருப்பதாக நான் உணருகின்றேன். கழகத்தில் முக்கிய பொறுப்பில் இருக்கும் நிர்வாகிகள் இதை உணர்ந்து இயக்கத்தை காக்க வேண்டும்.
எங்களுக்குள் ஒற்றுமை இருந்தால் போதும். ஒற்றுமை இருந்தால் வெளியில் இருந்து எந்த சதி வந்தாலும் அதை எதிர்கொள்ளும் ஆற்றல் படைத்தவர்கள் நிர்வாகிகளும் தொண்டர்களும்.
என்னிடம் யாரும் ஆலோசனை கேட்கவில்லை. இயக்கம் நன்றாக இருக்க வேண்டும். மூத்த நிர்வாகிகள் கலந்து பேசி இந்த இயக்கத்தை காக்க வேண்டும்.
போனது போக எஞ்சி இருப்பதாவது மிஞ்சுமா?. யாரையும் நீக்குவதோ, மற்றவர்களை ஒதுக்கும் நடவடிக்கையை எடுக்காமல் எல்லோரும் ஒற்றுமையாக கழகத்தை காப்பதுதான் என்னுடைய விருப்பம்.
கட்சிக்கு குந்தகமாக இருக்கும் நபர்கள் யாராக இருந்தாலும் அவர்களை ஏற்றுக்கொள்ளக் கூடாது. கட்சிகளை தங்கள் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரும் மனப்பான்மை இருக்கக் கூடாது. கட்சியின் நலனை பார்க்க வேண்டும். தங்களின் நலனை முன்னிறுத்தி கட்சியை பின்னுக்கு தள்ளிவிடக் கூடாது. அந்த வகையில் சில நபர்களை நாங்கள் தடுத்தோம்.
அதிமுகவை தவெக தலைவர் விஜய் ஒரு பொருட்டாகவே கருதவில்லை. கட்சியை ஒரு வலுவான இயக்கமாக காட்டத் தவறியதே அதற்கு காரணம். இதில் விஜயையோ அல்லது பிறரையோ குறைசொல்ல முடியாது
அதிமுக தலைவர்களிடையே ஈகோ பிரச்சனை. கட்சியை வளர்க்கும் எண்ணமே அவர்களுக்கு இல்லை. அதிமுக பலவீனம் அடைந்துகொண்டே செல்கிறது. கட்சியில் பயணிக்க மனம் இடமளிக்கவில்லை.
இவ்வாறு அவர் கூறினார்.

0 Comments