ராமநாதபுரம் மாவட்டம் திருவாடானை அரசு தலைமை மருத்துவமனையில், பிரேதப் பரிசோதனை செய்வதில் ஏற்பட்ட கால தாமதம் மற்றும் ஊழியர்களின் கவனக்குறைவால், உயிரிழந்த நபரின் உடல் அழுகிய சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதற்கு காரணமான அதிகாரிகள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
ராமநாதபுரம் மாவட்டம் தொண்டி பகுதியில் கடந்த 15 ஆண்டுகளுக்கும் மேலாக கிருஷ்ணகுட்டி (என்ற) முகமது இப்ராஹிம் என்பவர் வசித்து வந்தார். இவர் கடந்த 28-ஆம் தேதி தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டார். இதனைத் தொடர்ந்து, அவரது உடல் பிரேதப் பரிசோதனைக்காக திருவாடானை அரசு மருத்துவமனைக்குக் கொண்டு வரப்பட்டு, அங்குள்ள குளிர்சாதனப் பெட்டியில் (Freezer Box) வைக்கப்பட்டது.
இந்நிலையில், மருத்துவமனை ஊழியர்கள் குளிர்சாதனப் பெட்டியின் மின் இணைப்பை (On செய்யாமல்) இயக்காமல் விட்டதாகக் கூறப்படுகிறது. இதனால் பெட்டியினுள் இருந்த முகமது இப்ராஹிமின் உடல் முற்றிலும் அழுகி, வீணாகியுள்ளது.
இது குறித்து சமூக ஆர்வலர் தொண்டி மீரான் கூறுகையில்:
"கடந்த 28-ஆம் தேதியே உடலைக் கைப்பற்றி, அன்றைய தினமே பிரேதப் பரிசோதனை செய்து உறவினர்களிடம் ஒப்படைத்திருந்தால் இந்த அவலம் நேரிட்டிருக்காது. ஒருமுறை 'காவல் ஆய்வாளர் இல்லை' என்றும், மறுமுறை 'மருத்துவர் இல்லை' என்றும், அடுத்த நாள் 'பிரேதப் பரிசோதனை செய்ய ஊழியர்கள் இல்லை' என்றும் கூறி, மருத்துவமனை நிர்வாகமும் காவல்துறையும் மாறி மாறி காலத்தைக் கடத்தியுள்ளனர்."
இது குறித்து காவல்துறையினரிடம் கேட்டபோது, உயிரிழந்த நபரின் நெருங்கிய உறவினர்கள் வெளியூரிலிருந்து வர வேண்டியிருந்ததால், அவர்கள் வரும் வரை காத்திருந்ததாலேயே பிரேதப் பரிசோதனை செய்ய கால தாமதம் ஏற்பட்டதாகத் தெரிவித்தனர்.
காரணம் எதுவாக இருந்தாலும், பிரேதப் பரிசோதனைக்காகக் கொண்டு வரப்படும் உடல்களைப் பாதுகாப்பாக வைத்திருக்க வேண்டியது மருத்துவத்துறை மற்றும் மருத்துவமனை நிர்வாகத்தின் கடமையாகும். ஆனால், அவர்களின் அலட்சியத்தாலும், கவனக்குறைவாலும் உடல் அழுகியிருப்பது மனிதநேயமற்ற செயலாகும். எனவே, இந்த சம்பவத்திற்கு காரணமானவர்கள் மீது மாவட்ட நிர்வாகமும், சுகாதாரத்துறையும் உடனடியாக உரிய விசாரணை நடத்தி, கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் எனப் பொதுமக்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் வலியுறுத்தியுள்ளனர்.

0 Comments