காரைக்குடி அழகப்பா அரசு கலைக் கல்லூரி கல்லூரியில் போதை ஒழிப்பு தொடர்பான ஒரு நாள் விழிப்புணர்வு கருத்தரங்க நிகழ்வு நடைபெற்றது


காரைக்குடி அழகப்பா அரசு கலைக் கல்லூரி கல்லூரியில் இளையோர் செஞ்சிலுவை சங்கத்தின் சார்பாக கல்லூரியில் பயிலும் அனைத்து மாணவிகளுக்கும் போதை ஒழிப்பு தொடர்பான ஒரு நாள் விழிப்புணர்வு கருத்தரங்க நிகழ்வு நடைபெற்றது. இந்நிகழ்வில்  பள்ளத்தூர் மூத்த மகப்பேறு  மருத்துவர் தாமரை ஹரிபாபு, மகளிர் காவல் நிலையக் காவலர் மாலா, அழகப்பாபுரம் காவல் நிலையக் காவலர் ராமநாதன் ஆகியோர் பங்கேற்று சிறப்பித்தனர். முதலில் இளையோர் செஞ்சிலுவைச் சங்க ஒருங்கிணைப்பாளர் முனைவர் பாரதி ராணி வரவேற்றிட,நிகழ்வின்  தலைமை உரையினை  கல்லூரியின் முதல்வர் முனைவர் வசந்தி நிகழ்த்தினார். 

வரலாற்றுத் துறைத் தலைவர் முனைவர் நிலோபர் பேகம்  வாழ்த்துரை வழங்கினார். நிகழ்வின் நோக்க உரையினை தாவரவியல் துறைத் தலைவர் முனைவர் கோமளவல்லி வழங்கினார். மருத்துவர் தாமரை  போதைப்பொருளின் பயன்பாட்டால் பெண்களுக்கு ஏற்படும் பொதுவான பாதிப்புகள் மற்றும் மகப்பேறு கால பாதிப்புகள் குறித்து எடுத்து விளக்கி பெற்றோரின் வழிகாட்டல் படி நடக்க வலியுறுத்தி விழிப்புணர்வை ஏற்படுத்தினார். 

காவலர்கள் மாலா மற்றும் இராமநாதன் ஆகியோர் காவல்நிலையத்தில் சந்திக்கும் பெரும்பாலான வழக்குகளைக் குறிப்பிட்டு,  பெரும்பாலும் இளையோரின் பாதுகாப்பற்ற வாழ்வினையும், பருவத்தில் ஏற்படும் மனநிலை மாற்றங்கள் குறித்தும் போதையினால் சீரழியும் இளையோர் நிலை குறித்தும் எடுத்துரைத்து தங்களை எவ்வாறு பாதுகாத்துக்கொள்ள வேண்டும் என்று வலியுறுத்தினர். நிகழ்வின் நிறைவாக இளங்கலைத் தமிழ் முதலாமாண்டு மாணவி நன்றியுரை கூறினார். நிகழ்வின் ஏற்பாடுகளை முதல்வரின் வழிகாட்டுதலின்படி இளையோர் செஞ்சிலுவைச் சங்கத்தின் ஒருங்கிணைப்பாளர் முனைவர் பாரதி ராணி செய்திருந்தார்.

Post a Comment

0 Comments