தேனி மாவட்ட வளர்ச்சி ஒருங்கிணைப்பு மற்றும் கண்காணிப்புக் குழுக்கூட்டம் நடைபெற்றது

 


தேனி மாவட்ட ஆட்சியர் அலுவலக புதிய கூட்டரங்கில்,மாவட்ட வளர்ச்சி ஒருங்கிணைப்பு மற்றும் கண்காணிப்புக் குழுக்கூட்டம் கண்காணிப்புக் குழுத்தலைவர், தேனி  பாராளுமன்ற உறுப்பினர் தங்க தமிழ்செல்வன்  தலைமையில், மாவட்ட ஆட்சித்தலைவர்  மரு.இரா.வைத்திநாதன்,  முன்னிலையில்  நடைபெற்றது.

  தேனி மாவட்ட  மேலாண்மைத்துறை, ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித்துறை, பேரூராட்சிகள்துறை, தமிழ்நாடு நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரியம், நகராட்சி நிர்வாகம், வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறை, வேளாண்மை பொறியியல் துறை, தோட்டக்கலைத்துறை, முன்னோடி வங்கி, பொது சுகாதாரம் மற்றும் நோய்த்தடுப்பு மருந்துத்துறை, பள்ளிக் கல்வித்துறை, சமூக நலத்துறை, ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை, கூட்டுறவுத்துறை, தமிழ்நாடு மின் உற்பத்தி      மற்றும்     பகிர்மானக்    கழகம்,     கனிமவளத்துறை,      தொழில்       வணிகத்துறை, 

மாவட்ட வழங்கல்  மற்றும்   நுகர்வோர் பாதுகாப்புத்துறை, மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை உள்ளிட்ட பல்வேறு துறைகளின் சார்பில் ஒன்றிய மற்றும் மாநில அரசின் நிதியின் கீழ் துறை ரீதியாக செயல்படுத்தப்பட்டு வரும் திட்டங்கள், அதன் விவரங்கள், நிதிநிலை மற்றும் செலவினங்கள் ஆகியன குறித்தும், நடைபெற்று வரும் பணிகளை விரைந்து முடித்து பொதுமக்களின் பயன்பாட்டிற்கு கொண்டு வருவதற்காக மேற்கொள்ளப்பட்டு வரும் நடவடிக்கைகள் ஆகியன குறித்தும் மாவட்ட ஆட்சித்தலைவர்  முன்னிலையில், கண்காணிப்புக் குழுத்தலைவர் / தேனி பாராளுமன்ற உறுப்பினர்  துறை சார்ந்த  அலுவலர்களுடன்  ஆய்வு மேற்கொண்டார். 

பின்னர்,   துறை சார்ந்த அலுவலர்கள் தங்கள் துறை ரீதியாக மேற்கொண்ட பணிகள் மற்றும் மேற்கொள்ளப்பட வேண்டிய பணிகள், தேவையான நிதி ஆதாரங்கள் ஆகியன தொடர்பாக ஆண்டறிக்கையின்படி விரிவாக எடுத்துரைத்தனர்.

அனைத்துத்துறை அலுவலர்களும் ஒன்றிய மற்றும் மாநில அரசுகளின் திட்டங்கள் பொதுமக்களிடையே சென்றடைவதை உறுதி செய்ய வேண்டும். மக்கள் நலனை கருத்தில் கொண்டு, அனைத்துத்துறை அரசு அலுவலர்களும் ஒருங்கிணைந்து பணியாற்றிட வேண்டும் என கண்காணிப்புக் குழுத்தலைவர்/ தேனி பாராளுமன்ற உறுப்பினர் தங்க தமிழ்செல்வன் அவர்கள் துறை அலுவலர்களுக்கு அறிவுறுத்தினார்.

இக்கூட்டத்தில்  சட்டமன்ற உறுப்பினர்கள் க.சபரி ஐங்கரன் (பெரியகுளம்), பி.எல்.ஏ.ஜெகநாத் மிஸ்ரா (கம்பம்), ஆ.மகாராஜன் (ஆண்டிபட்டி), கூடுதல் ஆட்சியர் (வளர்ச்சி) ரஜத்பீடன், துணை இயக்குநர்  (ஸ்ரீவில்லிப்புத்தூர் மேகமலை புலிகள் காப்பகம்)விவேக்குமார் பி. யாதவ், மாவட்ட வன அலுவலர் ஜி.கிரண், மாவட்ட வருவாய் அலுவலர் ப.ராஜகுமார், உதவி வனப்பாதுகாவலர் சாய்சரண் ரெட்டி, கூடுதல் காவல் கண்காணிப்பாளர் கலைக்கதிரவன்  மற்றும் பல்வேறு துறை சார்ந்த அரசு அலுவலர்கள், உள்ளாட்சி பிரதிநிதிகள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

Post a Comment

0 Comments