திருவாடானை அருகே சிப்காட் அமைக்க நிலம் அளவீடு செய்ய வந்த ஆட்சியருக்கு மக்கள் எதிர்ப்பு ​

 


ராமநாதபுரம் மாவட்டம் திருவாடானை தாலுகா பா௹ர் பகுதியில், சிப்காட் (SIPCOT) தொழிற்பேட்டை அமைப்பதற்காகச் சுமார் 398 ஏக்கர் விவசாய நிலங்கள் கையகப்படுத்தப்பட்டதாகக் கூறப்படுகிறது. இந்நிலையில், இந்த நிலங்களை அளவீடு செய்வதற்காக மாவட்ட ஆட்சியர் சிவகுரு பிரபாகரன், மாவட்ட வருவாய் அலுவலர், திருவாடானை வட்டாட்சியர் (தாசில்தார்) மற்றும் கிராம நிர்வாக அலுவலர் ஆகியோர் பா௹ர் பகுதிக்கு வந்திருந்தனர்.

​இதுகுறித்து பொதுமக்களுக்கு முன்கூட்டியே எவ்வித அறிவிப்பும் வழங்கப்படவில்லை எனக் கூறப்படுகிறது. அதிகாரிகள் நிலத்தை அளவீடு செய்யும் பணியில் ஈடுபட்டிருந்தபோது, இதையறிந்த அப்பகுதி பொதுமக்கள் மற்றும் விவசாயிகள் சம்பவ இடத்தில் திரண்டு வந்து அதிகாரிகளுக்குக் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். இதனால் அங்கு பெரும் பரபரப்பு நிலவியது.



​பொதுமக்களின் பலத்த எதிர்ப்பைத் தொடர்ந்து, நிலம் அளவீடு செய்யும் பணியைக் கைவிட்டு மாவட்ட ஆட்சியரும், மாவட்ட வருவாய் அலுவலரும் அங்கிருந்து புறப்பட்டுச் சென்றனர்.இதுகுறித்து மாவட்ட வருவாய் அலுவலரிடம் கேட்டபோது, "சிப்காட் அமைப்பது தொடர்பாக இடத்தை நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்ய மட்டுமே வந்தோம்" என்று தெரிவித்தார். ஆனால், அதிகாரிகள் நிலத்தை அளவீடு செய்து எல்லைக் கம்பிகள் ஊன்ற முயற்சி செய்ததாகப் பொதுமக்கள் தரப்பில் குற்றம் சாட்டப்படுகிறது.



​இதுகுறித்து அப்பகுதி விவசாயிகள் கவலை தெரிவிக்கையில், "இங்கு தொழிற்சாலை அமைந்தால் எங்களது விவசாயம் முற்றிலும் பாதிக்கப்படும். வாழ்வாதாரமான இந்த நிலங்களை விட்டால், எங்களுக்கு உயிரை மாய்த்துக் கொள்வதைத் தவிர வேறு வழியில்லை. எனவே, அரசு உரிய நடவடிக்கை எடுத்து இந்தத் திட்டத்தைக் கைவிட வேண்டும். மேலும், இப்பகுதியை விவசாயப் பாதுகாப்பு மண்டலமாக அறிவிக்க வேண்டும்" என கோரிக்கை விடுத்துள்ளனர்.அரசின் இந்த முயற்சி தொடர்ந்தால், மக்களைத் திரட்டிப் பல்வேறு தொடர் போராட்டங்களை கையில் எடுக்கப் போவதாகவும் விவசாயிகள் எச்சரித்துள்ளனர்.

Post a Comment

0 Comments