பாரம்பரியமாக விவசாயிகளுக்கு மத்திய அரசு வழங்கும் மானியங்களுக்கு சாதி மத அடையாளங்களை உட்பகுத்தி பார்க்க கூடாது நாகையில் பாரதிய கிஷான் யூனியன் தேசிய தலைவர் வலியுறுத்தல்


நாகப்பட்டினத்தில் தமிழக விவசாயிகள் பாதுகாப்பு சங்கத்தின் சார்பில் விவசாயிகள் மீனவர்கள் வாழ்வாதார கோரிக்கை மாநாடு நடைபெற்றது. இதில் பாரதிய கிஷான் யூனியன் தேசிய தலைவர் டெல்லி ராகேஷ் திகாயத், டெல்லி போராட்ட ஒருங்கிணைப்பாளர் யுத்வீர் சிங், தமிழக விவசாயிகள் பாதுகாப்பு சங்க நிறுவனர் வழக்கறிஞர்.ஈசன் முருகசாமி, மீத்தேன் திட்ட எதிர்ப்பு கூட்டமைப்பு தலைமை ஒருங்கிணைப்பாளர் ஜெயராமன் உள்ளிட்டோர் சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொண்டனர். வெளிப்பாளையம் தம்பிதுரை பூங்காவில் இருந்து விவசாயிகள் பேரணியாக புறப்பட்டு மாநாடு நடைபெற்ற தனியார் மண்டபம் வரை வந்தனர். அதனைத் தொடர்ந்து நடைபெற்ற மாநாட்டில் டெல்டா மாவட்டங்களை பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமாக அறிவித்துவிட்டு, CPCL ஆலை விரிவாக்கம் என்ற பெயரில் நாகை மாவட்டத்தை, பெட்ரோல் கெமிக்கல் மண்டலமாக மாற்ற முயற்சிப்பதை கண்டித்தும்,   ஆலை விரிவாக்கத்திற்காக கையப்படுத்தப்படும் விவசாய நிலங்களை  சந்தை மதிப்பிற்கு இணையாக  நிர்ணயம் செய்ய வேண்டும் உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது. இதில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட விவசாயிகள் கலந்து கொண்டனர். 

அப்போது செய்தியாளரிடம் பேசிய பாரதிய கிஷான் யூனியன் தேசிய தலைவர் டெல்லி ராகேஷ் திகாயத், விவசாயிகளுக்கு வழங்கப்படுவதாக சில திட்டங்களை அறிவிக்கும் பிரதமர் மோடி அதனை நிறைவேற்றுவதில்லை எனவும், பாரம்பரியமாக விவசாயிகளுக்கு மத்திய அரசு வழங்கும் மானியங்களுக்கு சாதி மத அடையாளங்களை உள்புகுத்தி பார்க்கக் கூடாது எனவும் விவசாயிகளை விவசாயிகளாக பார்க்க வேண்டும் என தெரிவித்தார். மேலும் வருமானம் இரட்டிப்பாகும் என பிரதமர் சொல்லி வருகிறார் ஆனால் வருமானம் அதிகரிக்காமல் கடன் பெறுவதே அதிகரித்துள்ளது இதனால் விவசாயிகள் மிகுந்த நஷ்டம் அடைந்துள்ளனர் என்றும் மத்திய அரசு கொண்டுவரும் திட்டங்களுக்காக விவசாயிகள் நிலத்தை கொடுத்துவிட்டு ஒன்றும் இல்லாமல் நிற்கதையாக இருக்கும் நிலை உள்ளது அவர்களுக்கு மாற்று ஏற்பாடும், குடும்பத்தில் ஒருவருக்கு வேலையும் வழங்க வேண்டும் என்றார். விவசாய சங்கங்களின் கோரிக்கைகளை வலியுறுத்தி மார்ச் 20ஆம் தேதி புது டெல்லியில் அமைதிப் பேரணி நடத்த உள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.

Post a Comment

0 Comments