அனைத்திந்திய இளைஞர் பெருமன்றத்தின் சார்பில் எங்கே எனது வேலை? என்ற முழக்கத்தை முன்வைத்து பகத்சிங் நினைவு நாளான மார்ச்.23 முதல் ஏப்ரல்- 2 வரையில் தமிழகம் முழுவதும் தொடர் பரப்புரைப் பயணம் நடைபெறுகிறது.இந்த பயணம் ஏப்ரல் 2 ஆம் தேதி திருச்சியில் நடைபெறும் இளைஞர்கள் எழுச்சி மாநாட்டில் நிறைவடைகிறது. மத்திய, மாநில அரசு நிறுவனங்கள், பள்ளிகளில் காலியாக உள்ள இடங்களை நிரப்பவும், தனியார் நிறுவனங்களில் வேலை வாய்ப்புக்கான இட ஒதுக்கீட்டை கொண்டுவர வேண்டும் என்பன உள்ளிட்ட பல கோரிக்கைகளை முன்வைத்து பரப்புரைப் பயணம் நடைபெறுகிறது.
இதன் ஒரு பகுதியாக வேதாரண்யத்தில் இருந்து கு.இராஜேந்திரன் தலைமையில் ஒரு பயணக் குழு பிரசாரத்தை தொடங்கியது. இவர்களுக்கு கீழையூர் ஒன்றியத்திற்கு உட்பட்ட திருவாய்மூர்,எட்டுக்குடி, திருக்குவளை,வாழக்கரை, கீழையூர்,மேலப்பிடாகை,திருப்பூண்டிஉள்ளிட்ட பல்வேறு இடங்களில் வரவேற்பு அளிக்கப்பட்டது.
தொடர்ந்து வேளாங்கண்ணி கடைவீதியில் வரவேற்புக்கூட்டம் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மாநில குழு உறுப்பினர் டி.செல்வம் தலைமையில் நடைப்பெற்றது. இக்கூட்டத்தில் நாகை நாடாளுமன்ற உறுப்பினர் செல்வராஜ் கலந்துக்கொண்டு பேசியதாவது;தற்பொழுது உள்ள சூழலில் மத்திய அரசால் பல துறைகள் தனியார் மயமாகி வருவதால் நாட்டில் பல கோடி இளைஞர்கள் படித்து விட்டு வேலை கிடைக்காமல் தவித்து வருகின்றனர். இவர்களுக்கு எப்போது அரசு வேலை வழங்கும் என்ற கேள்வியையும் வேதனையுடன் எழுப்பினார்.
இக்கூட்டத்தில் இந்திய கம்யூனிஸ்ட் மாவட்ட துணை செயலாளர் பாஸ்கர் வரவேற்றார். ஒன்றிய செயலாளர் எஸ்.காந்தி, அனைத்திந்திய இளைஞர் பெருமன்ற மாவட்ட தலைவர் மாரி. கார்த்திகேசன், மாவட்ட செயலாளர் டி.சந்திரமோகன், மாவட்ட குழு உறுப்பினர் ஏ.எஸ்.பகத்சிங், மாவட்ட துணை செயலாளர் எஸ்.ரமேஷ் உள்ளிட்ட நிர்வாகிகள் மற்றும் இளைஞர் பெருமன்றத்தைச் சேர்ந்த ஏராளமானோர் கலந்துக்கொண்டனர்.

0 Comments