• Breaking News

    மூவலூர் மங்கள சௌந்தரநாயகி சமேத மார்க்கசகாய சுவாமி கோயில் பங்குனி உத்திர பெருவிழாவை முன்னிட்டு திருத்தேரோட்டம் நடைபெற்றது


    மயிலாடுதுறை அருகே மூவலூர் கிராமத்தில் இந்து சமய அறநிலையத்துறைக்கு உட்பட்ட தேவாரப்பாடல் பெற்ற மங்கள சௌந்தரநாயகி சமேத மார்க்கசகாய சுவாமி கோயில் அமைந்துள்ளது. இக்கோயிலில் சுவாமி சதாசிவ மூர்த்தியாக எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலிக்கிறார்.இறைவனை சௌந்தர நாயகி அம்பாள் திருக்கல்யாணம் புரிந்த தலமாகவும்,துர்காபரமேஸ்வரி மகிஷாசூரனை வதம் செய்த பின்னர் இங்கு எழுந்தருளியுள்ள சுவாமியை வழிபட்டு அகோர வடிவிலிருந்து சௌந்தர்ய வடிவு பெற்ற தலமாகவும்,வழித்துணை நாதருக்கு இதய நோய் தீர்த்த தலமாகவும்,பிப்பல மகரிஷி முக்தி அடைந்த தளமாகவும் புராண வரலாறு கூறுகிறது.மேலும் இத்தலத்தில் எழுந்தருளியுள்ள மார்க்க சகாய சுவாமியை பிரம்மா,விஷ்ணு,ருத்ரன் ஆகிய மூவரும் வழிபட்ட தலமாகவும் இது விளங்கி வருகிறது.

    இக்கோவிலில் சுவாமிக்கு வில்வ அர்ச்சனை செய்து அந்த வில்வத்தை தண்ணீரில் விட்டு பருகினால் இதய நோய் தீரும் என்பது ஐதீகம்.பல்வேறு சிறப்புகளையுடைய இவ்வாலயத்தின் பங்குனி உத்திர பிரம்மோத்ஸவ பெருவிழா கடந்த 26-ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது.ஒன்பதாம் திருநாளின் முக்கிய விழாவான திருத்தேரோட்டம் நேற்று மாலை நடைபெற்றது.இதையொட்டி கோவிலில் இருந்து மார்க்கசகாய சுவாமி சௌந்தரநாயகி அம்பாளுடன் திருத்தேரில் எழுந்தருளினார்.பின்னர் மகாதீபாராதனை செய்யப்பட்டு தேரோட்டம் நடைபெற்றது. ஏராளமான பக்தர்கள் தேரினை வடம் பிடித்து  இழுக்க நான்கு ரதவீதிகளையும் வலம் வந்து தேர் நிலையை அடைந்தது. வீடுகள் தோறும் அர்ச்சனை செய்து பக்தர்கள் வழிபாடு நடத்தினர்.

    No comments