• Breaking News

    ஆள்மாறாட்டம் செய்து ரூ.1½ கோடி மதிப்புள்ள நிலத்தை ஆட்டையை போட்ட பெண் கைது

     


    சென்னை அம்பத்தூர் லெனின் நகர் 20-வது குறுக்குத் தெருவை சேர்ந்தவர் ராஜாராம் (வயது 60). ஆந்திராவை சேர்ந்த இவர், ஊறுகாய், முறுக்கு, பிஸ்கட் தயாரித்து கடைகளுக்கு வினியோகம் செய்து வருகிறார்.


    இந்தநிலையில் சென்னை கொரட்டூர், மூகாம்பிகை நகரில் உள்ள இவருக்கு சொந்தமான 4800 சதுர அடி கொண்ட 2 வீட்டு மனைகளையும் ஆள்மாறாட்டம் செய்து விற்பனை செய்யப்பட்டு இருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தார்.


    இதுபற்றி ஆவடி போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் உள்ள மத்திய குற்றப்பிரிவு போலீசில் புகார் கொடுத்தார். ஆவடி போலீஸ் கமிஷனர் சங்கர் உத்தரவின் பேரில், உதவி கமிஷனர் பொன்சங்கர் தலைமையில் மத்திய குற்றப்பிரிவு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர்.


    விசாரணையில் அரியலூர் மாவட்டம், சின்ன வளையம், குடியாத்தம் தெருவை சேர்ந்த ஜோதி என்பவருடைய மனைவி விஜி (44). இவர், ராஜாராமின் தங்கை விஜி என போலியான ஆவணம் தயாரித்து, அதன்மூலம் ராஜாராம் தனது தங்கை விஜிக்கு பவர் கொடுத்ததாகவும், விஜி அதை வைத்து சென்னை கொளத்தூர் திருமலை நகரை சேர்ந்த கொத்தசுப்புராயுடு, ஆந்திர மாநிலம் மதில்மேடு பொன்னியம்மன் தெருவை சேர்ந்த பழனி மற்றும் சென்னை கீழ்ப்பாக்கம் அஜய் ஆர்சாட் பகுதியை சேர்ந்த புவனேஸ்வரி ஆகிய 3 பேருக்கும் ராஜாராமுக்கு சொந்தமான 2 வீட்டுமனைகளையும் 3 ஆக பிரித்து விற்றதும் தெரியவந்தது.


    இதையடுத்து போலீசார் நேற்று காலை விஜியை அதிரடியாக கைது செய்தனர். பின்னர் அவரை அம்பத்தூர் கோர்ட்டில் ஆஜர்படுத்தி புழல் பெண்கள் சிறையில் அடைத்தனர். மோசடி செய்யப்பட்ட நிலத்தின் மதிப்பு ரூ.1½ கோடி என கூறப்படுகிறது.

    No comments