வரதட்சனை கேட்டு மனைவியின் கழுத்தை அறுத்து கொலை செய்த கணவர் கைது
மதுரை மாவட்டம் பேரையூர் அருகே வரதட்சனை கேட்டு மனைவியின் கழுத்தை அறுத்து கொலை செய்த கணவர் போலீஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
மதுரை மாவட்டம், பேரையூர் அருகே உள்ள வேப்பம்பட்டியை சேர்ந்தவர் சின்னச்சாமி ( 33). இவருடைய மனைவி செல்வபிரியா (30). இவர்களுக்கு திருமணம் ஆகி 8 ஆண்டுகள் ஆகிறது. இவர்களுக்கு மூன்று வயதில் குழந்தை ஒன்றும் உள்ளது.
இந்தநிலையில் சின்னச்சாமி மற்றும் அவரது பெற்றோர் செல்வபிரியாவிடம் தொடர்ந்து வரதட்சணை கேட்டு தொல்லை கொடுத்து வந்ததாக கூறப்படுகிறது. இதனால் செல்வபிரியா மற்றும் சின்னசாமிக்கு இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டு செல்வபிரியா தனது தந்தை ஊரான மூணாறுக்கு திரும்பச் சென்றுவிட்டார். பின்னர் இரு தரப்பிலும் கலந்து பேசி சமாதானப்படுத்தி செல்வபிரியாவை கணவன் வீட்டுக்கு அழைத்து வந்துள்ளனர்.
இந்த நிலையில் நேற்று முன்தினம் செல்வபிரியாவுக்கும் சின்னசாமிக்கும் இடையே மீண்டும் தகராறு ஏற்பட்டுள்ளது. அதன் விளைவாக செல்வபிரியாவை கழுத்தை அறுத்து சின்னச்சாமி கொலை செய்துள்ளார். இது குறித்து தகவல் அறிந்த சாப்டூர் போலீஸார் விரைந்து வந்து செல்வபிரியாவின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக மதுரை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
இதுகுறித்து செல்வபிரியாவின் தந்தை முத்துப்பாண்டி சாப்டூர் போலீஸில் புகார் செய்தார். அதன்பேரில் சின்னச்சாமி மற்றும் அவரது பெற்றோர் மீது கொலை வழக்குப் பதிவு செய்துள்ள சாப்டூர் போலீஸார் சின்னசாமியை கைது செய்துள்ளனர்.
இந்நிலையில் மதுரை அரசு பொது மருத்துவமனையில் வைக்கப்பட்டிருந்த செல்வபிரியாவின் உடலை பிரேத பரிசோதனைக்குப் பின் வாங்க மறுத்து அவரது உறவினர்கள் போராட்டம் நடத்தினர்.
கணவர் சின்னசாமியின் குடும்பத்தினர் ஐந்து பேரை கைது செய்ய வேண்டும் என்று அவர்கள் வலியுறுத்தினர். அவர்களை போலீஸார் சமாதானம் செய்து அனைவரையும் கலைந்து போக செய்தனர்.
No comments