சென்னை மாநகராட்சி கட்டுப்பாட்டு மையத்தில் மேயர் பிரியா ஆய்வு - MAKKAL NERAM

Breaking

Tuesday, November 14, 2023

சென்னை மாநகராட்சி கட்டுப்பாட்டு மையத்தில் மேயர் பிரியா ஆய்வு

 


தென்கிழக்கு வங்கக்கடல் பகுதிகளில் இன்று குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகி உள்ளது. இது மேற்கு-வடமேற்கு திசையில் நகர்ந்து மத்தியமேற்கு வங்கக்கடல் பகுதிகளில் காற்றழுத்த தாழ்வு மண்டலமாக 16-ம் தேதி வாக்கில் நிலவக்கூடும். இதன் காரணமாக இன்று தமிழகம், புதுவை, காரைக்கால் பகுதிகளில் அநேக இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது .

மேலும் சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் அடுத்த 24 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒருசில பகுதிகளில் மிதமான மழை பெய்யக்கூடும். அவ்வப்போது ஒரு சில இடங்களில் பலத்த மழை பெய்ய வாய்ப்பு உள்ளது என வானிலை ஆய்வு மையம் தெரிவித்தது.

இந்நிலையில் சென்னையில் பல்வேறு பகுதிகளில் விட்டு விட்டு கனமழை பெய்து வருகின்றது. நாளையும் கனமழை பெய்யக்கூடும் என்று வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. இதனால் சென்னையில் பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் பெருநகர சென்னை மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் வடகிழக்குப் பருவமழை தொடர்பாக மேற்கொள்ளப்பட்டு வரும் முன்னெச்சரிக்கை மற்றும் கண்காணிப்பு நடவடிக்கைகளை கண்காணிக்க ஒருங்கிணைந்த கட்டளை மற்றும் கட்டுப்பாட்டு மையம் அமைக்கப்பட்டுள்ளது. அதில் கனமழை பாதிப்புகள் மற்றும் நீர்தேங்கும் இடங்கள் குறித்து கண்காணிக்கப்பட்டு வருகிறது. இந்த மையத்தில் சென்னை மாநகராட்சி மேயர் பிரியா இன்று ஆய்வு மேற்கொண்டு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளைக் கேட்டறிந்தார்.

No comments:

Post a Comment