அயோத்தி ராமர் கோயில் கும்பாபிஷேகம்...... அகிலேஷ் யாதவ் புறக்கணிப்பு......
உத்தரப்பிரதேச மாநிலம் அயோத்தியில் ராமர் கோயில் கட்டும் பணிகள் கடந்த 2019-ம் ஆண்டு தொடங்கி விறுவிறுப்புடன் நடைபெற்று வந்தது. கோயிலின் தரைத்தளம் கட்டி முடிக்கப்பட்டுள்ள நிலையில் அதன் கும்பாபிஷேகம் ஜனவரி 22-ம் தேதி நடைபெறுகிறது. அன்றைய தினம் குழந்தை ராமர் சிலையும் பிரதிஷ்டை செய்யப்பட உள்ளது. இதற்காக மிக விரிவான முறையில் ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகின்றன.
இந்த விழாவில் கலந்து கொள்ள மத குருமார்கள், தொழிலதிபர்கள், திரைப்படத் துறையினர் உள்ளிட்ட 8000 முக்கிய பிரமுகர்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. இதில் பக்தர்கள் யாரும் கலந்து கொள்ள வேண்டாம் என்றும், தங்கள் வீடுகளில் இருந்தே விளக்கேற்றுமாறும் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது.
இந்த விழாவில் பங்கேற்க காங்கிரஸ் கட்சிக்கு அழைப்பு விடுக்கப்பட்டது. ஆனால், இந்த விழாவில் காங்கிரஸ் கட்சி சார்பில் யாரும் விழாவில் கலந்து கொள்ளப்போவதில்லை என்று நேற்று அறிவித்து விட்டது. இது பாஜக மற்றும் ஆர்எஸ்எஸ் நடத்தும் அரசியல் விழாவாக இருப்பதால் இதில் தாங்கள் கலந்து கொள்ளப் போவதில்லை என்று காங்கிரஸ் அறிவித்துள்ளது.
இதே கருத்தை முன்வைத்து திரிணமுல் காங்கிரஸ் தலைவர் மம்தா பானர்ஜியும் இந்த விழாவில் கலந்து கொள்ளப் போவதில்லை என்று புறக்கணித்துள்ளார்.
இந்த நிலையில் இந்தியா கூட்டணியில் இடம் பெற்றுள்ள உத்தரப்பிரதேச முன்னாள் முதல்வர் அகிலேஷ் யாதவ்வின் சமாஜ்வாதி கட்சியும் ராமர் கோயில் திறப்பு விழாவில் கலந்து கொள்ளப் போவதில்லை என்று தற்போது அறிவித்துள்ளது. இந்தியா கூட்டணியில் உள்ள தலைவர்கள் இந்த விழாவை முற்றிலுமாக புறக்கணிக்கும் நிலையில், பாஜக மற்றும் ஆர்எஸ்எஸ் நடத்தும் விழாவாகவே அயோத்தி ராமர் கோயில் கும்பாபிஷேகம் மாறியிருக்கிறது.
No comments