தமிழகத்தில் 3 நாட்களுக்கு அதி கன மழை பெய்யும்..... இந்திய வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை
தமிழ்நாட்டில் கோவை, நீலகிரி மாவட்டங்களில் நாளை முதல் 3 நாட்களுக்கு மிக கனமழை பெய்யும் என சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. இது தொடர்பாக அந்த மையம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், “தென்னிந்திய பகுதிகளின் மேல் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக இன்று தமிழகத்தின் ஓரிரு இடங்களிலும், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் இடி, மின்னலுடன் லேசானது முதல் மிதமான மழை பெய்யக் கூடும்.22ம் தேதி அன்று தமிழகத்தில் ஒரு சில இடங்கள் புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக் கூடும்.நீலகிரி, கோவை மாவட்ட மலைப் பகுதிகளில் கனமழை, மிக கனமழை பெய்யக் கூடும். திருப்பூர், தேனி, திண்டுக்கல், தென்காசி, திருநெல்வேலி மாவட்ட மலைப் பகுதிகள் மற்றும் கன்னியாகுமரி மாவட்டத்தில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்யக்கூடும்.
23 ம் தேதி, தமிழகத்தில் ஒருசில இடங்களிலும், புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளில் இடி, மின்னலுடன் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.நீலகிரி, கோவை மாவட்ட மலை பகுதிகளில் ஓரிரு இடங்களில் கன முதல் மிக கனமழையும், திருப்பூர், திண்டுக்கல், தேனி, ஈரோடு, சேலம், தருமபுரி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளது.
24, 25ம் தேதிகளில், தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுச்சேரி காரைக்கால் பகுதிகளிலும் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். நீலகிரி, கோவை உள்ளிட்ட மலை மாவட்டப் பகுதிகளில் கன மழை முதல் மிக கனமழை பெய்யக்கூடும். வரவிருக்கும் அடுத்த 7 நாள்களும் தமிழகத்தில் பரவலாக மழை பெய்ய வாய்ப்பு உள்ளது என இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
No comments