இரவு முழுவதும் தக்காளியை பாதுகாத்த காவல்துறையினர்
உத்தரப்பிரதேச மாநிலத்தில் தக்காளி லோடு ஏற்றி வந்த லாரி நடுரோட்டில் கவிழ்ந்த நிலையில், விடிய, விடிய தக்காளிக்கு உ.பி., போலீசார் காவல் இருந்தனர்.கான்பூர் அருகே தேசிய நெடுஞ்சாலையில் 18 டன் தக்காளியை ஏற்றியவாறு லாரி ஒன்று பெங்களூருவில் இருந்து புதுடில்லிக்குச் சென்று கொண்டிருந்தது. அதிவேகத்தில் லாரி சென்று கொண்டு இருக்க, அப்போது எதிர்பாராத விதமாக மாடு ஒன்று சாலையின் குறுக்கே நின்றுள்ளது.
இதை கண்ட லாரி டிரைவர், சுதாரிப்பதற்குள் அந்த பயங்கரம் அரங்கேறியது. 18 டன் தக்காளியுடன் லாரி அப்படியே ரோட்டில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. லாரியில் இருந்த தக்காளிகள் அனைத்தும் அப்படியே சாலையில் சிதறியது.கிட்டத்தட்ட 18 டன் தக்காளிகளும் ரோட்டில் சிதறிக்கிடக்க, அந்த சாலை முழுவதுமே எங்கு பார்த்தாலும் தக்காளிமயமாகவே காட்சி அளித்தது.
விபத்து குறித்து தகவலறிந்த போலீசார், சம்பவ பகுதிக்குச் சென்றனர்.சாலை முழுக்கவே தக்காளி, எங்கு காணினும் இரவு என்பதால் என்ன செய்வது என்று போலீசார் யோசித்துள்ளனர். தக்காளிகளை சேகரிப்பது விடிவதற்குள் இயலாத காரியம் என்பதால் அங்கேயே காவல் காக்க ஆரம்பித்தனர். விபத்தின் போது காயம் அடைந்த லாரி க்ளீனர், இருசக்கர வாகனத்தில் வந்த பெண் ஒருவர் என இரண்டு பேரையும் போலீசார் மீட்டு மருத்துமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர்.
No comments