பழவேற்காட்டில் அழிந்து வரும் கடல் வாழ் ஆமை இனத்தை பாதுகாக்க வேண்டி மீன்வளம் மற்றும் மீனவர் நலத்துறை சார்பில் விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது
திருவள்ளூர் மாவட்டம் பழவேற்காட்டில் மீன்வளம் மற்றும் மீனவர் நலத்துறை சார்பில் மீனவர்களிடம் அழிந்து வரும் கடல்வாழ் ஆமைகளின் இனத்தை பாதுகாக்க வேண்டியதன் அவசியத்தை வலியுறுத்தி விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது.இந்த நிகழ்ச்சிக்கு சிறப்பு அழைப்பாளராக பொன்னேரி சார் ஆட்சியர் வாகே சங்கேத் பல்வந்த் கலந்துகொண்டு பேரணியை கொடியசைத்து துவக்கி வைத்தார் இதில் 100-க்கும் மேற்பட்ட மீனவர்கள் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டு விழிப்புணர்வு பதாகைகளை கையில் ஏந்தியவாறு பழவேற்காடு பஜார் வீதிகளின் வழியாக ஊர்வலமாக சென்று இனப்பெருக்கத்திற்காக கடற்கரையில் ஆமைகள் இடும் முட்டைகளை பாதுகாக்கவும், கடலில் ஆமைகள் செல்லும் வழித்தடத்தில் மோட்டார் படகுகளை இயக்கி அவைகளுக்கு இடையூறு ஏற்படுத்துவதை தவிர்க்க வேண்டும், மற்றும் நெகிழி கழிவுகள், ரசாயன கழிவுகள் கடலில் கலப்பதை தடுத்து சுற்றுச்சூழலுக்கு தீங்கு ஏற்படா வண்ணம் கடல்வாழ் உயிரினங்களை பாதுகாக்க வலியுறுத்தியும் இந்த விழிப்புணர்வு பேரணியில் முழக்கங்கள் எழுப்பப்பட்டன.
பின்னர் கடலில் கடல் ஆமைகள் வலையில் சிக்கி உள்ளதா என ரோந்து பணி மேற்கொள்ளப்பட்டது.இந்த நிகழ்ச்சியில் பொன்னேரி மீன்வளத்துறை உதவி இயக்குனர் ஞா.அஜய் ஆனந்த், மீன்வளத்துறை ஆய்வாளர்கள் பாரதிராஜா, அன்பழகன்,கடலோர காவல் உதவி ஆய்வாளர் சபாபதி, காவல் உதவி ஆய்வாளர் திருவேங்கடம்,வன அலுவலர் நரசிம்மன், மீன்வள கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையம் உதவி பொறியாளர் சுதன், கும்மிடிப்பூண்டி மாசு கட்டுப்பாட்டு வாரியம் லிவிங்ஸ்டன் தமிழ்நாடு மாசுக்கட்டுப்பாடு வாரிய உதவி பொறியாளர் சாம்குமார் மற்றும் மீனவர்கள், பொதுமக்கள் என பலர் கலந்து கொண்டனர்.
No comments